Tamil News
Home செய்திகள் நளினி சிறையில் தற்கொலைக்கு முயன்றார்?

நளினி சிறையில் தற்கொலைக்கு முயன்றார்?

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ள நளினி, சக கைதியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலைக்கு முயன்றதாக அறிவிக்கப்படுகின்றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் நளினி வேலூர் பெண்கள் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த அறையிலிருந்து அவர் வெளியேறாது இருப்பதற்காக கிருஸ்ணகிரியைச் சேர்ந்த ராதா என்ற கைதியை அவருடன் துணைக்காக இருக்க சிறைத்துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.

இதேவேளை ராதாவிற்கும் நளினிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக ராதா சிறை அலுவலரிடம் முறைப்பாடு அளித்திருந்தார். இதனையடுத்து நளினி சேலையால் தனது கழுத்தை இறுக்கி, தற்கொலை செய்து விடுவேன் என்று தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிறைத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கிடையில் மத்திய, மாநில உளவுத்துறையினர் நளினி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக அறிக்கை அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறும் போது, 30 ஆண்டுகளாக சிறையில் நளினி பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றார். அவருடன் உதவியாக உள்ள கைதி ஒருவரிடம் சாதாரண பிரச்சினைகளுக்காக அவர் தற்கொலை முயற்சி செய்து கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version