Tamil News
Home செய்திகள் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்த விபரம் தமிழீழ வரைபடத்தை ஒத்ததே – ரம்புக்வெல

தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்த விபரம் தமிழீழ வரைபடத்தை ஒத்ததே – ரம்புக்வெல

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் இலங்கை விளக்கப்படத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழ நாட்டு வரைபடத்திற்கும் தொடர்பிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சிங்களத் தலைவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தாலும், அந்த சிங்களத் தலைவரது தேர்தல் வி ஞ்ஞாபனத்தில் சிங்கள பௌத்த மக்களின் மனங்களில் ஆழமாக இருந்த சந்தேகத்திற்கிடமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததே பிரதான பிரச்சினையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

கெஹெலிய ரம்புக்வெல தனது பிரதேசமான கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அதில் அவர் பேசும் போது,

“கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வரைபடமாகப் பார்த்தால் ஈழநாட்டு வரைபடமானது அதில் தெளிவாகத் தெரிகின்றது என்பது மூடிமறைக்க முடியாத உண்மையாகும் என அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளில் ஒரு நேர்கோடு காணப்பட்டது. அந்தக் கோட்டினை மூடிமறைக்க முடியாது. ஈழநாட்டு வரைபடத்தை பார்த்தால் அது புரியும். அதனை மூடிமறைத்துப் பேசினால் நாங்கள் பொய்கூறுவதாகி விடும்.

ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ, தாம் தமிழ் மக்களிடம் இருந்தும் வாக்குகளை எதிர்பார்த்த போதிலும் அது நிறைவேறவில்லை என்றாலும், தாம் நாட்டின் ஜனாதிபதி என்பதை தனது பதவியேற்பு நிகழ்வில் அநுராதபுரத்தில் வைத்து கூறியிருந்தார்.

இதனிடையே, சிங்களத் தலைவர் ஒருவருக்கே வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்ததை நான் அவதானித்திருந்தேன். எனினும் அந்தப் பேச்சில் ஓர் அர்த்தம் உள்ளது. அந்த சிங்களத் தலைவரது தேர்தல் விஞ்ஞாபனக் கட்டமைப்பினுள் பெரும்பான்மையின மக்களின் சந்தேகங்களுக்கு உரிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவே நான் அவதானிக்கின்றேன்.

அதற்குக் காரணமும் உள்ளது. சில இனவாத அரசியல் தலைவர்கள் சில சந்தர்ப்பங்களில் சவால்களை விடுத்தனர். அதாவது, முடியுமானால் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி தேர்தலை வென்று காட்டுமாறு சவால்கள் முன்வைக்கப்பட்டன. அந்த சவால்களை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டதாகவே நான் அறிகிறேன். அந்த பிழையான சிந்தனை கொண்டவர்களை ஒன்றிணைத்து இந்த நாட்டிலுள்ள சிங்களம், தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பறங்கியர் உள்ளிட்ட அனைவரையும் இணைக்கின்ற வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதே அவசியமாகும்” என்று தெரிவித்தார்.

Exit mobile version