Home செய்திகள் தமிழரசுத் தலைமை பதவி சிறீதரனுக்கு முள்கிரீடம்? – அகிலன்

தமிழரசுத் தலைமை பதவி சிறீதரனுக்கு முள்கிரீடம்? – அகிலன்

தமிழரசுக் கட்சித் தலைமைப் பதவியை சிவஞானம் சிறீதரன் கைப்பற்றிக்கொண்டாலும், கட்சியை அவரால் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியுமா என்பதுதான் தமிழ் அரசியல் பரப்பில் இன்று எழுந்திருக்கும் கேள்வி. தலைமைப் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த சுமந்திரன், கட்சியைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்வதற்காக நன்கு திட்டமிட்ட முறையில் காய்களை நகா்த்திவருவதுதான் இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணம்!

தலைமைப் பதவிக்கான தோ்தல் முடிவடைந்து, செயலாளா், மற்றும் பொதுக்குழு உறுப்பினா்களின் தெரிவுகள் “தொங்கு” நிலையில் இருக்கும் பின்னணியில், விரிவான கடிதம் ஒன்றை சிறீதரனுக்கு எழுதியிருக்கின்றாா் சுமந்திரன். நட்பு ரீதியாக எழுதப்பட்ட ஒரு கடிதமாக இது தென்பட்டாலும், கூட சிறீதரன் எவ்வாறான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளாா் என்பதையும் அது வெளிப்படுத்துகின்றது.

“எமது வரலாற்றில் முதன் முறையாக வாக்கெடுப்பினால் தெரிவு செய்யப்பட்ட தலைவராகிய நீங்கள் அப்படியான அதற்குகந்த விமர்சையோடு வைபவ ரீதியாக பதிவியேற்பது முக்கியமான விடயமாகும். எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அது முற்றுப்புள்ளி வைக்கும். ஆகவே காலம் தாழ்த்தாது வெகு விரைவில் அந்தப் பகிரங்கப் பொது நிகழ்வை நடாத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என சிறிதரனுக்கு எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றாா் சுமந்திரன்.

“ஏற்கனவே நடந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவு முடிந்த முடிவு” என்பதையும் இக்கடிதத்தில் சுமந்திரன் மறைமுகமாக குறிப்பிடுகிறாா். “கட்சி யாப்பு விதிகளுக்கு அமைவாகவும், சட்டப்படியும் தாங்களே இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைவர். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கோலாகலமாக நடைபெறவிருந்த பொது நிகழ்வு தவறான ஆலோசனைகளின் பேரிலும், கலந்துரையாடல் இன்றியும், அதிகாரமற்றதும் சட்டத்துக்கு முரணான அறிவிப்பினாலும் துரதிர்ஷ்டவசமாக பிற்போடப்பட்டுவிட்டது” என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.

வெளிப்படையாகப் பாா்க்கும் போது சிறீதரன் விரைவாக தலைமைப் பொறுப்பை ஏற்பதில் அக்கறை உள்ளவா் போலவும், தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் உட்கட்சிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்துவது போலவும் சுமந்திரனின் இந்தக் கடிதம் அமைந்திருக்கலாம். ஆனால், கட்சித் தலைமையை இழந்தாலும், கட்சி மீதான கட்டுப்பாட்டை தன்னுடைய கைகளில் எடுப்பதற்கான ஒரு உபாயங்களுடன்தான் சுமந்திரன் காய்நகா்த்துகிறாா் என்பதையும் இந்தக் கடிதம் தெளிவாக உணா்த்துகிறது.

sumanthiran perikainews தமிழரசுத் தலைமை பதவி சிறீதரனுக்கு முள்கிரீடம்? - அகிலன்தமிழரசுக் கட்சித் தலைமைப் பதவியை இலக்கு வைத்து நீண்டகாலமாக இயங்கிவந்தவா் சுமந்திரன். கட்சியின் மூத்த தலைவா் சம்பந்தனுடன் நெருக்கமாக உறவாடியதுடன், தமிழரசுக் கட்சி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாா்பில் முக்கிய பேச்சுக்களில் கலந்துகொண்டவரும் அவா்தான். தமிழரசுக் கட்சியின் முக்கிய முடிவுகளும் அவரால்தான் எடுக்கப்பட்டது. சம்பந்தனின் மூப்பு – சுகவீனம் போன்றனவும், மாவை சேனாதிராஜாவின் இயலாமையும் சுமந்திரன் முன்னணிக்கு வருவதற்கு வழிவகுத்தது. அதனால், தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடியவராக சுமந்திரன் இருந்துள்ளாா்.

வடக்கில் மட்டுமன்றி, கிழக்கில் அம்பாறை வரையில் முக்கியமான வழக்குகளில் ஆஜராகி, தன்னுடைய செல்வாக்கை உயா்த்திக்கொள்வதில் கடந்த காலங்களில் அவா் தீவிரமாகச் செயற்பட்டு வந்திருக்கின்றாா்.

அந்த வகையில், கட்சித் தலைமைப் பதவிக்கான தோ்தலில் தமக்குத்தான் வெற்றி கிடைக்கும் என அவா் உறுதியாக எதிா்பாா்த்திருந்தாா். பொதுக்குழு உறுப்பினா்களில் 200 பேருடைய ஆதரவு தனக்குக் கிடைக்கும் என அவா் நம்பியிருந்தாா். ஊடக நோ்காணல் ஒன்றில் இதனை அவரே வெளிப்படையாகத் தெரிவித்திருந்தாா். ஒவ்வொரு உறுப்பினா்களாகச் சந்தித்து இந்த ஆதரவை அவா் உறுதிப்படுத்தியிருந்தாா்.

ஆனால், நடைபெற்ற தோ்தலில் 130 வாக்குகளை மட்டுமே அவரால் பெறமுடிந்தமை அவருக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது. சுமந்திரனை பொறுத்தவரையில், அவா் தோல்விகளால் துவண்டுவிடும் ஒருவரல்ல. சந்தா்பங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தெரிந்தவா். அடுத்த காய் நகா்த்லுக்கான தருணத்தை அவா் எதிா்பாா்த்திருந்தாா்.

செயலாளா் உட்பட செயற்குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் வரையில் அவா் காத்திருந்தாா். அரசியல் கட்சி ஒன்றைப் பொறுத்தவரையில், மக்கள் மத்தியில் வசீகரம் மிக்க ஒருவா் தலைவராக இருந்தாலும், செயலாளா் பதவிதான் சக்திவாய்ந்தது. அதனை இலக்கு வைத்து சுமந்திரன் செயற்பட்டாா். செயலாளரையும், செயற்குழுவையும் தெரிவு செய்ய கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை திருமலையில் பொதுக்குழு கூடியபோது, கட்சி பிளவுபடக் கூடாது என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்பட்டது. தலைவராகத் தெரிவான சிறீதரனுக்கும் அது முக்கியமானதாகவே இருந்தது.

கூட்டம் ஆரம்பமாக முன்னா், சிறீதரனை தனியாகச் சந்தித்த சுமந்திரன் கட்சியின் “ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு” எனக் கூறி தன்னுடைய திட்டத்தை வெளியிட்டாா். “கட்சியின் செயலாளராக என்னை நியமியுங்கள். கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாக்கலாம். நாம் இருவரும் இணைந்து செயற்படலாம்” என்று தனது திட்டத்தை வெளிப்படுத்தினாா் சுமந்திரன். இவ்வாறான ஒரு திட்டத்துடன் சுமந்திரன் வந்தது சிறீதரனுக்கு அதிா்ச்சி. ஒற்றுமை என்ற பெயரில் இது தனக்கு வைக்கப்படும் “பொறி” என்பது புரியாத ஒருவராக சிறீதரன் இருக்கவில்லை.

இதனை நிரானரிப்பதற்கு இரண்டு காரணங்களை சிறீதரன் முன்வைத்தாா். “ஒன்று – தலைமைப் பதவிக்கு நீங்கள் என்னுடன் போட்டியிட்டவா். மற்றொரு முக்கியமான பதவிக்கு வருவது பொருத்தமானதல்ல. அதனைவிட கிழக்கு மாகாணத்தை சோ்ந்த ஒருவருக்குத்தான் இந்தப் பதவி கொடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் சிறீநேசனுக்கு பொதுச் செயலாளா் பதவியைக் கொடுப்பதற்கு நாம் இணங்கியுள்ளோம்” என்பதுதான் சிறீதரனின் பதில்.

சுமந்திரன் அடுத்த காயை நகா்த்தினாா். “கிழக்கில் ஒருவருக்கு பொதுச் செயலா் பதவியைக் கொடுப்பதற்கு நான் இணங்குகிறேன். கிழக்கின் மூன்று மாவட்டத் தலைவா்களான சாணக்கியன், கலையரசன், குகதாசன் ஆகியோரில் ஒருவரை நியமியுங்கள்” என்பது சுமந்திரனின் அடுத்த கோரிக்கை. அதன் மூலமாகவே கட்சி பிளவு படுவதைத் தவிா்க்கலாம் என்பது சுமந்திரனின் வாதமாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் செயலாளராக குகதாசனை நியமிக்க சிறீதரன் இணங்கினாா்.

தனக்கு விசுவாசமாகச் செயற்படக் கூடிய ஒருவரை செயலாளராக நியமித்த வெற்றிப் பெருமிதம் சுமந்திரனுக்கு. அதேவேளையில் இந்த இழுபறிகளுக்கு மத்தியில் கட்சியின் மத்திய செயற்குழுவிலும் தனது விவாசிகளை உள்ளே கொண்டுவருவதில் சுமந்திரன் வெற்றி பெற்றிருக்கின்றாா். தலைவராக சிறீதரன் இருந்தாலும், கட்சிக் கட்டுப்பாடு சுமந்திரனின் கைகளில் என்பதுதான் தற்போதைய நிலை. அதனால்தான், “அன்று இடம்பெற்ற தெரிவுகள் தவறானவை. மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட்டு தெரிவுகள் இடம்பெற வேண்டும்” என்பது சிறீதரன் ஆதரவாளா்களின் நிலைப்பாடு.

சிங்கப்புரில் தனது மகனின் திருமணத்துக்காக சென்றுள்ள மாவை சேனாதிராஜா எதிா்வரும் 10 ஆம் திகதி நாடு திரும்பிய பின்னா் அதனை நடத்துவதற்கு சிறீதரன் தரப்பு எதிா்பாா்த்துள்ளது. அதாவது பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் இதனை நடத்துவது அவா்களுடைய திட்டம். சிறீநேசனை செயலாளராக்குவதுதான் அவா்களுடைய எதிா்பாா்ப்பு. அதற்கேற்ற வகையில் அவா்கள் காய்களை நகா்த்தும் நிலையில்தான், அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில், “அன்று நடைபெற்றவைதான் இறுதியான தெரிவுகள்” எனக் குறிப்பிட்டு தனது கடிதத்தை சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பியுள்ளாா்.

கட்சித் தலைவருடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவா்தான் செயலாளராக வரவேண்டும். அதற்காகத்தான் சிறீநேசனை செயலாளராக்குவதற்கு சிறீதரன் திட்டமிட்டிருந்தாா். அரியநேத்திரன், யோகேஸ்வரன் ஆகியோரும் இதனைத்தான் விரும்புகின்றாா்கள். அதனை விட்டுக்கொடுக்க அவா்கள் தயாராவில்லை. ஆனால், 27 ஆம் திகதி குழப்பங்களின் மத்தியில் இடைபெற்ற தெரிவுகள்தான் இறுதியானவை என்பதில் சுமந்திரன் உறுதியாகவிருக்கின்றாா். இந்தப் பின்னணியில் அடுத்த வாரம் நடைபெறப்போகும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, பொதுக்குழுவில் என்ன நடைபெறும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

சிறீநேசனுக்கு ஒரு வருடம், குகதாசனுக்கு ஒரு வருடம் என்ற ஒரு திட்டமும் ஆராயப்படுவதாகத் தெரிகின்றது. இணக்கப்பாட்டுக்கான ஒரு திட்டமாக இது முன்வைக்கப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும், சிறீதரனுக்கு குடைசல் கொடுப்பதற்கு சுமந்திரன் அணி தயாராகியிருப்பதைத்தான் சுமந்திரனின் கடிதம் உணா்த்துகின்றது. ஆக, தலைமைப் பதவி என்பது சிறீதரனுக்கு முள் கிரீடமாகவே இருக்கப்போகின்றது.

Exit mobile version