இதன் மூலம், தேர்தல் இன்றியே இதுவரை காலமும் பொதுச் செயலர் தெரிவு செய்யப்பட்டு வந்த சம்பிரதாயமும் மாற்றமடையலாம். அத்துடன், தலைவர் பதவியை வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர் வகித்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவருக்கு பொதுச் செயலர் என்ற மரபும் மாற்றமடைய சந்தர்ப்பம் உள்ளது.
அண்மையில், தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கும் மரபை மாற்றி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த சிறீதரன் வெற்றி பெற்று தலைவராக உள்ளார். இந்த நிலையில், பொதுச் செயலர் பதவிக்கும் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர் தேர்தல் மூலம் தெரிவானால் 75 ஆண்டுகள் வரலாற்று பாரம்பரியம் கொண்ட அந்தக் கட்சியின் மரபு மாற்றமடையலாம்.
இதேநேரம், தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரனின் வெற்றிக்காக உழைத்தவர்கள் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசனை முன்மொழிந்துள்ளனர். எனினும், பொதுச் செயலர் பதவிக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த துரைராஜசிங்கம், வடக்கை சேர்ந்த சேவியர் குலநாயகம் ஆகியோரும் போட்டியிட தயாராகி வருகின்றனர்.
பொதுச் செயலர் பதவி தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.