ஜே.வி.பி. வேட்பாளருக்கு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிப்பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்தாவை வெற்றிபெற வைக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை அவர் இட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜே.வி.பி. ஒரு அரசியல் சிறுபான்மை கட்சி. இன்று ஒப்பீட்டளவில் நல்ல கட்சிதான். அதன் தலைவர் அநுர என் நல்ல நண்பர். அநுர வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவருக்கு முதலில் வாழ்த்து சொன்ன தமிழ் அரசியல்வாதி நான்தான். இக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் பலர் என் நண்பர்கள்தான். இந்த கட்சிக்கும் ஒரு கறுப்பு பக்க வரலாறு, ஐ.தே.க., ஸ்ரீல.சு.க. மற்றும் இன்றைய பொதுஜன பெரமுன போன்று இருக்கிறது. எனினும் இன்றைய எல்லா பிரச்சினைகளுக்கும் வரலாற்றிலிருந்து விடை தேடக்கூடாது வரலாற்றிலிருந்து பாடம்தான் படிக்க வேண்டும்.
ஆனால், இங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. ஜே.வி.பி, இன்றைய போட்டியில் வெகுதூரம் தள்ளி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. வெற்றி பெறுவது சாத்தியமில்லை. இந்நிலையில் இவர்களுக்கு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிப்பது, சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்தாவை வெற்றிபெற வைக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. சஜித், கோத்தா – இருவரும் ஐம்பது விகிதத்துக்கு போட்டியிடும் போது, ஜே.வி.பி. ஐந்து விகிதத்துக்கு போட்டி இடுகிறது. இதுதான் உண்மை. இதை மறைத்து, அலங்கார வார்த்தைகளை கொண்டு, பூசி மெழுகுவது பிழை.