ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து முன்வைப்பதற்கான பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் இன்று கையெழுத்திட்டன.
யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழில் இன்று நடைபெற்ற இறுதிச் சந்திப்பின்போதே இந்தப் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ச ஆகிய பிரதான வேட்பாளர்களிடம் தமிழர் தரப்பின் கோரிக்கைகளைக் கூட்டாக முன்வைத்து பேரம் பேசுவது என இந்தப் பொது இணக்கப்பாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய பொது இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் 5 கட்சிகள் கையொப்பமிட்டன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இன்றைய சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க போதிலும் அவர்கள் உடன்பாட்டில் கையொப்பமிடவில்லை.