சமூகச் செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினால் கடந்த திங்கள் கிழமை கைது செய்யப்பட்டார். பொதுமக்களின் அமைதியை சீர்குலைத்தமை, அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியமை, பொதுமக்களை ஆத்திரமடையச் செய்யும் வகையிலான காணொலிகளை வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பியத் நிகேஷலவை கைது செய்தோம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று முன்தினம் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, அவரை நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை பிரதான நீதிவான், 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.