பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபக் ஷ நாட்டிற்கு பொருத்தமில்லாத ஒரு வேட்பாளர், தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் நாட்டின் அபிவிருத்தி பற்றி எவ்வித கருத்துகளையும், உரைகளையும் முன்வைக்க முடியாத ஒரு கேள்விக்கு சுயாதீன பதில் அளிக்க முடியாத ஒரு வேட்பாளர் நாட்டிற்கு எவ்விதத்தில் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியை எதிர்காலங்களில் முன்னெடுப்பார் என்பது சந்தேகத்திற்குரியது.
மக்களின் பெறுமதிமிக்க வாக்கை நாட்டிற்குத் தேவை இல்லாத ஜனாதிபதிக்கு வழங்காதீர்கள். தன்னகத்தே பல்வேறு திறமைகளைக் கொண்ட ஜனாதிபதியே நாட்டுக்குத் தேவை. அவருக்கே உங்களின் வாக்கை வழங்குங்கள் என்று தம்பர அமில தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
படைகளுக்கு தலைமை தாங்கவில்லை, இராணுவத் தளபதியே அனைத்தையும் தலைமை தாங்கினார். தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்று பதில் சொல்லாமல் தப்பித்து செல்லும் ஒரு ஜனாதிபதியை நம்பி எவ்வாறு நாட்டை ஒப்படைப்பது? திடகாத்திரமான ஜனாதிபதி வேட்பாளர் எனின் திடகாத்திரமாக உரையாற்ற வேண்டும். எனக்கு எதுவும் தெரியாது தெரியாது என்று தப்பித்துச் செல்ல முற்படத் தேவை இல்லை. ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒரு நாளைக்கு ஆறு கூட்டங்களில் கலந்து கொள்கிறார். தனது உரைகளை தைரியமாக மக்களுக்கு முன்வைக்கிறார், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளிக்கக் கூடியவர், நாட்டின் நிர்வாகி என்றால் இவ்வாறு இருக்க வேண்டும்,
நாட்டிற்கு தன்னை திறமையான நிர்வாகி என்று கூறிக்கொள்ளும் கோத்தபாய நாட்டின் நிர்வாகம் பற்றி மக்களின் முன்னிலையில் தெளிவூட்ட தைரியம் இல்லாதவராகவே இருக்கிறார், நாட்டின் பிரஜாவுரிமையை முழுமையாகப் பெறாத ஒரு வேட்பாளர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்க பிராஜாவுரிமை கொண்ட ஒருவர் நாட்டின் ஜனாதிபதியென்பது நாம் அனைவரும் சிந்திக்கக் கூடிய விடயமாகும்.
பலதரப்பட்ட திறமைகளைக் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்ய நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார். மேலும் இங்கு உரையாற்றிய பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, அமெரிக்காவின் பிரஜாவுரிமையை நீக்கியமை தொடர்பில் இன்னமும் கோத்தபாய ஆவணங்களை மக்களுக்கு முன்னிலைப் படுத்தவில்லை. தன்னுடைய பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளது என்றால் நாளைய தினம் மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இலங்கைப் பிரஜைக்கு தங்களின் வாக்கை மக்கள் வழங்க வேண்டும், அமெரிக்க பிரஜைக்கு தங்களின் வாக்கை வழங்க வேண்டாம் என்றும் அவர் இதன் போது தெரிவித்தார்.