கொரோனா அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் சுகாதார நடைமுறைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்பற்றாதவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் போக்குவரத்தில் ஈடுபடுவோர் சுகாதார நடைமுறைகளை பேணுவது தொடர்பில் கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய அதிவேக பாதை போக்குவரத்து பொலிஸாரும் மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து இந்த கண்காணிப்பு சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பயணம் செய்வோர் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்பதை வலியுறுத்தும் பொலிஸார் அவ்வாறு அணியாதவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
இதன் கீழ் மட்டக்களப்பு ஊடாகவும் மட்டக்களப்புக்குள்ளும் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களும் பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது.
இதன்போது சுகாதார சட்ட திட்டங்களை மீறி சேவையில் ஈடுபட்ட வாகன சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கைகளை வழங்கிய பொலிஸார், பேருந்துகளில் மேலதிகமாக அனுமதிக்கப்பட்ட பயணிகளை இறக்கி, வேறு பேருந்துகளில் பயணிக்க அனுமதித்தனர்.
அத்துடன் பேருந்துகளில் பயணம் செய்வோர் சமூக இடைவெளியை பேணுதல்,முகக்கசவம் அணிதல் தொடர்பான அறிவுத்தல்களும் வழங்கப்பட்டன.
இதேபோன்று மோட்டார் சைக்கிள் உட்பட வாகனங்களில் பயணிப்போர் முகக் கசவம் அணிவதை கட்டாயப்படுத்தியும் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கம்பஹாவைச் சேர்ந்த தாதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வைத்தியசாலையில் அவர் கடமையாற்றிய ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதையடுத்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன், வைத்திய சாலையில் கடமையாற்றிய தாதியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோனை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் எவரும் வைத்தியசாலைகளுக்கோ வீதிகளிலோ செல்லவேண்டாம்” என்றார்.