Tamil News
Home செய்திகள் கைதிகளை உடனே பாதுகாக்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை

கைதிகளை உடனே பாதுகாக்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை

இலங்கையில் தற்போது நிலவிவரும் கொரோனா ஆபத்து நிலையை கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதற்கு  நடவடிக்கைகளை எடுக்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குரலற்றவர்களின் குரல் அமைப்பு சார்பாக ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“கொரோனாவின் மரணப்பிடியிலிருந்து உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாக்க யாவரும் ஒன்றிணைய வேண்டும். உலகளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புக்கள் மிக மோசமாக காணப்படுகிறது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தற்போது இலங்கையில் மூன்றாவது அலை மிக மோசமான விளைவுகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. தொடர்ந்து சிறப்பு தனிமைப்படுத்தல் நிலையங்கள் அதிகரிக்கப்படுகிறது.

இருப்பினும் இந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் நோய்த்தொற்று தீவிரத்தால் தனிமைப்படுத்தப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இறப்புகளும் அதிகரித்து வருகின்றன. நோய்த் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

நோய்த்தொற்று தீவிரத்தால் பாதிக்கப்பட்டவர்களை தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது. நாளாந்தம் சராசரியாக 500 பேருக்கு மேல் தொற்றாளர்களாக இனம் காணப்படுகின்றனர். மருத்துவ ஆய்வுகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வைரஸ் மிக வேகமாகவும் மோசமாகவும் பரவி முழு நாட்டையும் அச்சுறுத்தி வருகின்றது.

சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களும் கூட மீண்டும் வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகும் அபாயமும் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் கொழும்பில் உள்ள சிறைச்சாலைகளில் நோய்த் தொற்று மோசமாக பரவ ஆரம்பித்துள்ளது. எனினும் இந்த சிறைக்கைதிகளின் விடயத்தில் அரசாங்கமும் அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் எதேச்சையாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது முதல் நாள் 7கைதிகள் தொற்றுக்கு ஆளாகி இருந்தமை கண்டறியப்பட்டது. அடுத்த நாள் அது 22ஆக அதிகரித்து பின்னர் படிப்படியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து கொண்டிருக்கின்றது. தற்போது சிறைச்சாலைகளில் கொரோனாத் தாக்கம் மிக மோசமாக அதிகரித்து கொண்டிருக்கின்றது என்பது அப்பட்டமான உண்மை.

கொரோனா தாக்கம் ஏற்பட்ட போது சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் பொழுது, அரைவாசியைக் கூட அங்கு நடைமுறைப்படுத்துவதாகத் தெரியவில்லை.

கைதிகளைப் பார்வையிடுதல், நீதிமன்ற நடவடிக்கைகள் என்பன இடைநிறுத்தப்பட்ட பின்பும் இந்த வைரஸ் தொற்று சிறைக்குள் நுழைந்தது என்றால் இதற்கு யார் பொறுப்பாளி என்பதை எவராலும் தேடிப் பார்க்க முடியவில்லை. மாறாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் ஏனைய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் என தினமும் கைது செய்யப்படுவோர் சிறைத்துறையின் கீழ் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

இலங்கையில் 12000 கைதிகளை மட்டுமே தடுக்கக்கூடிய சிறைச்சாலைகளில் 37000 த்துக்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு எப்படி சமூக இடைவெளி இருக்கப்போகின்றது. இவர்களை பாதுகாப்புடன் எப்படி பராமரிக்க முடியும்?. தற்போது முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் சுமார் 15-25 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளுக்கு நீரிழிவு, மன உளைச்சல், சுவாசக்கோளாறு போன்ற பல தீராத வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தமிழ் அரசியல்கைதிகள் இன்னொருபுறம் மிக மோசமான உடல், உளப் பாதிப்புக்கும் உள்ளாகி இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்களுக்கு போதிய மருத்துவமோ , போசாக்கான உணவோ கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இன்றி உள்ளனர்.

இவர்களுக்கான நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து காலதாமதப்பட்டு வருக்கின்றது. இதனாலும் இவர்கள் உடல், உள ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் அரசியல் கைதிகளில் 10 க்கும் மேற்பட்டோர் சிறைச்சாலைக்குள்ளேயே உயிரிழந்துள்ளனர்.

சம காலத்தில் தமிழ் அரசியல்கைதிகளை பழிவாங்குவதற்கான அனைத்து சாதகமான சூழ்நிலைகள் கொரோனா மூலமும் ஏற்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.

தற்போது கொழும்பு மாநகர எல்லைக்குள் கொரோனா தாக்கமும் மரணமும் அதிகரித்து வருகின்றது. தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையின் அமைவிடமான பொரளை பிரதேசம் தொற்று அபாய வலயமாக மாறியுள்ளது. இதனால் சிறைச்சாலை மீது சிறப்பு அவதானம் வேண்டும். சிறைச்சாலையில் நோய் கொத்தணி தோற்றம் பெற்று தொற்று நோய் அதிகரித்து வருவதும் தவிர்க்க முடியாது என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதுவரை நோய்த்தொற்று பற்றிப் பேசிக் கொண்டிருந்த நாம் தற்போது மரணம் பற்றி பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்தநிலையினைத் தொடர்ந்து நாம் நான்காவது அலையினை சந்திக்க நேரிடும் எனவும் சுகாதாரப்பிரிவினர் எச்சரிக்கை செய்கின்றனர். தொடர்ந்து வரும் பேரழிவு இன்னும் பாரதூரமாக இருக்கும் என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்போது சுகாதார அமைச்சினால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக இது இலங்கை நாட்டு மக்களுக்காக இருப்பினும் சிறைக்கைதிகளுக்கு இந்த வழிமுறைகள் எந்தளவு பொருத்தமாக அமையும் என்பது சந்தேகமே.

குறிப்பாக சிறைச்சாலையைப் பொருத்தமட்டில் எவ்வித சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றக் கூடியதாக இல்லை. சிறைச்சாலைகள் சமூக இடைவெளி, தொற்று நீக்கல், பரிந்துரைக்கப்பட்ட முகக்கவசம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய செயற்றிட்டம் என எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்படுவதாக இல்லை. இவ்வாறு இருக்கும்போது சிறைக்கொத்தணி ஏற்படுவதைத் தடுத்து சிறைகைதிகளை வைரஸ் தொற்றிலிருந்து எப்படி காப்பாற்ற முடியும்.

இதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா இவை எதுவும் இல்லவே இல்லை. பொதுவாக சிறைக்கைதிகளில் இருந்து தமிழ் அரசியல்கைதிகளை வேறுபடுத்தி வித்தியாசப்படுத்தி சிந்திக்க வேண்டிய அவசியப்பாடு உள்ளது. ஏனெனில் தமிழ் கைதிகள் உடல், உள ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை மட்டுமல்ல பல்வேறு நோய்களுடனும் நெருக்கடிகளுடனும் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள். இதனால் தமிழ் கைதிகள் இலகுவில் கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டு தங்கள் உயிர்களை இழக்க நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கான சாதகமான நிலைமைகளே உள்ளது. ஆகவே அரசும் , அரசாங்கமும் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நெருக்கடி நிலைமைகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய அவசர பணி உருவாகியுள்ளது. மிக நீண்ட காலமாக சிறைதடுப்பிலிருக்கும் தமிழ் அரசியல்கைதிகளுக்கு பொது மன்னிப்பு அல்லது நிபந்தனையின் உடனான பிணையினையோ வழங்கி விடுதலை செய்ய முன் வரவேண்டும்.

தமிழ் கைதிகளின் விடுதலையை சமகாலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினையும் கவனத்தில் கொண்டு மனிதாபிமானரீதியில் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்தவது மிகப் பொருத்தமான நடைமுறையாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இந்தத் தருணத்தை கைதிகளின் விடுதலைக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
நீண்ட காலமாக உடல் ரீதியிலும, உள ரீதியிலும் பாதிப்புற்று இருக்கும் கைதிகளை இலகுவில் கொரோனா தாக்கும்.

ஆகவே இவற்றிலிருந்து தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாக்க யாவரும் ஒன்றிணைந்து செயற்படுவது இன்றைய காலத்தின் கட்டாயமாகின்றது இந்த மனிதாபிமான செயற்பாட்டிற்காக யாவரும் ஒன்றிணைவோம்.”

Exit mobile version