ஐக்கிய நாடுகள் சபையின் சரத்து 99 ஆவதை பயன்படுத்தி காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரொனியோ குறெரஸ் கடந்த புதன்கிழமை (6) முயற்சிசெய்துள்ளார்.
ஐ.நா செயலாளர் நாயகம் இதனை பயன்படுத்தினால் அதனை ஐ.நாவின் பாதுகாப்புச்சபை கருத்தில் எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். உலகின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் ஆபத்துக்கள் ஏற்படும்போது ஐ.நா செயலாளர் நாயகம் இந்த சரத்தை பயன்படுத்தி பாதுகாப்புச் சபையின் நடவடிக்கையை கோர முடியும்.
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் வான் தாக்குதல்கள் மற்றும் படை நடவடிக்கைகள் காரணமாக பெருமளவான மக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் வரும் நிலையில் அங்கு ஒரு போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு பல நாடுகளும் அமைப்புக்களும் மேற்கொண்டு வருகின்றன.
தற்போது அங்கு இடம்பெறும் போர் உலகின் அமைதிக்கு மிகவும் ஆபத்தானது என ஐ.நாவின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா செயலாளர் நாயகத்தின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய அரபு அமீரகம் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் ஒன்றை ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட அமெரிக்கா, ரஸ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை மீறி இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியானதே.
பல தடவைகள் தீர்மானத்தை பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் முறியடித்திருந்தன.