Tamil News
Home உலகச் செய்திகள் எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

ஓமான் வளைகுடாவில் பயணித்த பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது இன்று காலை கடற்கண்ணி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

பஹ்ரைனை தளமாக கொண்ட அமெரிக்காவின் கடற்படை குறிப்பிட்ட கப்பல்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட கப்பல்களை இலக்குவைத்து டோர்படோ தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 12ஆம் திகதி சவுதி அரேபியாவின் இரண்டு பாரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் உட்பட 4 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த புதிய தாக்குதல் வளைகுடாவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் பின்புலத்தில் இந்தத் தாக்குதல்கள் நடப்பதாக அமெரிக்கா சந்தேகப்படுவதால் இந்த புதிய சம்பவத்தின் மூலம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் புதிய முறுகல் நிலை ஏற்படக்கூடுமென்ற அச்சம் தோன்றியுள்ளது.

இன்று தாக்குதல் நடத்தப்பட்ட எண்ணெய் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான கொகுகா குறாஜியஸில் இருந்து அதன் சிப்பந்திகள் 21  பேரும் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தாக்குதல்களில் சிக்கிய ஒரு கப்பலில் பெரும் தீ பிடித்ததை ஆதாரப்படுத்தும் நிழற்படங்களை ஈரான் வெளியிட்டது.

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதியை சீர்குலைக்கும் வகையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதான ஐயங்கள் நிலவுகின்றன.

கடந்த மாதம் 12ஆம் திகதி ஞாயிறன்று சவுதி அரேபியாவின் இரண்டு பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் ஈரானிய பின்புலத்தில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு தாக்குதல்களில் சேதமடைந்திருந்தன.

அதன் பின்னர் சவுதி அரசிற்கு சொந்தமான எண்ணெய் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி ஆயுததாரிகள் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாலும் விநியோகம் சீர்குலைந்தது.

றியாட் நகரில் இருந்து மேற்கில் உள்ள யான்பு நகருக்கு செல்லும் 1200 கிலோமீற்றர் நீளமுள்ள குழாய்களே இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன.

ஈரானிய எண்ணெய் விநியோகத்திற்கு அமெரிக்கா தடை விதித்தால் ஹோர்மூஸ் ஜலசந்தி நீர்த்தடத்தை மூடிவிடப் போவதாக ஏற்கனவே ஈரான் எச்சரித்த நிலையில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

தற்போதைய நிலவரம் மேலும் தீவிரமானால் உலக எண்ணெய் சந்தை கடும் நெருக்கடிக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

இதேவேளை இந்த தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் விலைகள் நான்கு வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version