ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் புறக்கணித்த செயலுக்கு,தமிழர்களின் உணர்வுகளை மதித்து இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை படைகளால் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்நிலையில், இலங்கை மீது சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவந்தன.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தத் தீர்மானத்தில் இந்தியா உள்ளிட்ட 14 நாட்கள் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தமைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இச்செயல் ஒன்றே போதும், அஇஅதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்
பச்சைத் துரோகத்திற்கு தகுந்த தண்டனையைத் தமிழ்நாடு தரவேண்டும்
— P. Chidambaram (@PChidambaram_IN) March 24, 2021
ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் பக்கத்தில் “ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா ஒதுங்கிக் கொண்டது. இது தமிழ் மக்களின் விருப்பம், ஒருமித்த உணர்வுகளுக்குச் செய்யப்பட்ட துரோகம்.
தமிழர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் அதிமுக-பாஜக கூட்டணியை தமிழக மக்கள் தேர்தலில் தண்டிக்க வேண்டும்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தால், தமிழர்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்ட அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.