அனைத்துலக மனித உரிமைகள் நாளினை முன்னிட்டு, ஈழத்தமிழர்களுக்கு ஈடுசெய் நீதிகோரலும், தமிழினப்படுகொலையினை நினைவுகூரலும் எனும் கருத்தரங்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் லண்டனில் முன்னெடுக்கப்பட்டது.
Room 104, Brunei Gallery, SOAS, University of London Thornhaugh Street, Russell Square, London WC1H 0XG இடத்தில் இடம்பெற்றிருந்த இக்கருத்தரங்கில், பல்வேறு சமூக அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமிழினத்தின் மீது, சிறிலங்கா ஆட்சியாளர்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய மனித உரிமைமீறல்கள், போர்குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பில் கருத்தாடப்பட்டதோடு, இதற்கான பொறுப்புக்கூறலும், தமிழர்களுக்கான ஈடுசெய் நீதியும் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்கள் வரவேற்புரை வழங்க, செல்வி வித்தியா நந்தகுமார் அவர்கள் தமிழினப்படுகொலை பற்றி விரிவான உரையொன்றினை வழங்கினார்.
தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட Panel Discussion ல் இலங்கையில் இருந்து வருகை தந்த நீதிபதி மனோன்மணி சதாசிவம் அவர்கள் “Sri Lanka is an Island of impunity defects of legal system in Sri Lanka and the need for international mechanism” எனும் தலைப்பில் சிறீலங்காவில் உள்ள சட்ட வல்லுநர் மற்றும் நீதவான்கள் சார்பாக தம் கருத்துக்களை பதிவு செய்தார்.
தொடர்ந்து Holocaust survivor Dr. Martin Stern MBE அவர்கள் “The Holocaust, Human Beings and Genocide” எனும் தலைப்பில் தனது சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார், அவர் பேசுகையில், ‘ஒவ்வொரு இனத்தின் படுகொலைகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவகையிலேயே அமைகின்றன, எனவே அதற்கான தீர்வுகளும் வித்தியாசமான அணுகு முறைகள் ஊடாகவே பெறப்பட வேண்டும்’ எனக்கூறினார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கேள்வி பதில் நேரத்தில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு கருத்தாளர்கள் பதில்களை வழங்கியிருந்தனர்.
மேலும் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான பார்த்தீபன், சபாபதி கிருசாந்த் மற்றும் சமூக-அரசியல் செயற்பாட்டாளர் திரு.மணிவண்ணன் அவர்களும் தமது கருத்துக்களை வழங்கியிருந்தனர். நன்றியுரையினை திருமகள்தேவி சதீஷ்கண்ணா அவர்கள் வழங்கியிருந்தனர்.