Home செய்திகள் நுண்கடன் திட்டம்: பெண்களை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்

நுண்கடன் திட்டம்: பெண்களை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்

நுண்கடன் திட்டத்தினை நிறுத்தி பெண்களை பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பும் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மட்டக்களப்பு, கித்துள் பிரதேசத்தில் முன்னெடுத்தனர்.

நுண்கடன் அரக்கர்களிடம் இருந்து பெண்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிறுத்து    நுண்டகடன் திட்டங்களை நிறுத்து,பாதுகாப்போம் பாதுகாப்போம் நுண்கடனில் இருந்து பெண்களை பாதுகாப்போம்,நுண்கடனை நிறுத்தி பெண்களை பாதுகாக்க ஜனாதிபதியே நடவடிக்கையெடுங்கள் போன்ற கோசங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.

IMG 0091 2 நுண்கடன் திட்டம்: பெண்களை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்

கடனில் இருந்து விடுபட்டு எங்களையும் மனிதர்களாக வாழவிடு,வறுமையின் கோரப்பிடியில் வாழும் மக்களுக்கான நீதியை நிலைநாட்டு, நுண்கடனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு முன்னெடுக்கும் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு முழுமையான ஆதரவு வழங்குகின்றது,இலங்கை நாட்டில் நுண்கடன் செயற்பாடுகளை முழுமையாக ரத்துச்செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

நுண்கடன் பெறும் நிறுவனங்களின் செயற்பாடுகளினால் இந்த நாட்டில் பல பெண்கள் தினமும் தற்கொலை செய்யும் நிலையேற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தனியார் நுண்கடன் திட்டங்களை நிறுத்தி அரச வங்கிகள் ஊடாக பெண்களுக்கான கடன்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நுண்கடன் கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் எனகோரியும், அதற்கு ஆதரவாக கிங்குராங் கொடையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வடமாகாண மக்கள் திட்டமிடல் மன்றத்தின் ஏற்பாட்டிலும்   நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version