Tamil News
Home செய்திகள் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பில் புத்தளத்தில் தேடுதல்

இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பில் புத்தளத்தில் தேடுதல்

புத்தளம் வனாத்துவில்லுவில் உள்ள லக்டோ தோட்டத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (04) பகல் நேரத்தில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் குழுவினருடன் தொடர்புடைய குழுக்கள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படும்  வனாத்துவில்லுவில் உள்ள லக்டோ தோட்டத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.

லக்டோ தோட்டத்தில் சஹ்ரான் குழுவினரால் பல்வேறு பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

அதனையடுத்து, லக்டோ தோட்டத்துக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், குறித்த தோட்டத்தில் இனந்தெரியாதவர்களால் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனத்தாவில்லு பொலிஸாருக்கு நேற்று முன்தினம் (03) தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, நேற்று (04) அங்கு சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் குழுவினருக்கு சொந்தமான பாரியவான பணம் குறித்த பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இனந்தெரியாதவர்கள் இந்த அகழ்வில் ஈடுபட்டிருக்கலாம் என, பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version