கண்டி பெரஹராவை இலக்கு வைத்திருந்த சஹ்ரான் குழு; புலனாய்வு அதிகாரி தகவல்

“ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கண்டி பெரஹரா நிகழ்விலேயே தாக்குதல் நடத்த சஹ்ரான் குழுவினர் திட்டமிட்டிருந்தனர்” என்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், கிழக்கு மாகாணத்தின் அரச புலனாய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக இரண்டாவது நாளாகவும் சாட்சியமளித்த அவர் மேலும் கூறுகையில், முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சிப்லி பாறுக்கே சஹ்ரானின் தேசிய தௌகீத் ஜமாத் அமைப்புக்கு அரசியல் ரீதியாக பெரும் ஒத்துழைப்பை வழங்கினார்.

ஏப்ரல் 21 தாக்குதல் திட்டத்தின் பின்னர் நௌபர் மௌலவி என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தனக்கு வழங்கிய வழங்கிய வாக்குமூலத்தில், இரண்டாவது தாக்குதல் இலக்காக கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் கண்டி பெரஹரா நிகழ்வில் தாக்குதல்களை நடத்த தௌகீத் ஜமாத் அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர் எனத் தெரிவித்தார் என்று தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.