வெளிநாடு செல்வதற்காக முகவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல இளைஞர்கள் நீர்கொழும்பிலுள்ள முகவரொருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துபோன சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக இணையவழியூடாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வடமராட்சி குடத்தனையை சேர்ந்த த.தர்மதாஸ் என்பவர் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

வெளிநாட்டுக்கு செல்வதற்காக 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியிலுள்ள முகவரிடம் 56 இலட்சம் ரூபா பணத்தை வழங்கினோம்.

பல தடவைகள் நாம் கொழும்புக்கு சென்றபோதும் எம்மை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் முகவர்கள் அலைக்கழித்தனர்.

கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது எம்மை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர். ஆகவே, பணத்தை மீட்டுத்தர உதவவேண்டும் என்றார்.