புலனாய்வு  காவல்துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட எழுத்தாளர் வெற்றிச்செல்வி சந்திரகலா

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட எழுத்தாளர் வெற்றிச்செல்வி

முன்னாள் போராளியும் எழுத்தாளரும் சமூக சேவையாளருமாகிய வெற்றிச்செல்வி சந்திரகலா புலனாய்வு காவல்துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மன்னார் காவல்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அவரை காவல்துறை ஐந்தரை மணித்தியாலங்கள் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து விசேடமாக வருகை தந்த புலனாய்வு காவல்துறையினரே தன்னை விசாரணை செய்ததாக வெற்றிச்செல்வி கூறினார். அவரால் வெளியிடப்பட்ட பங்கர் என்ற நூலைப்பற்றியும், மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பைப் பற்றியும் இந்த நீண்ட விசாரணை அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

போர்க்காலத்தில் எறிகணை தாக்குதல்கள் மற்றும் வான்வழி தாக்குதல்களில் இருந்து உயிர் தப்புவதற்காக வன்னிப்பிரதேச மக்கள் பங்கர்கள் எனப்படுகின்ற பதுங்கு குழிகளிலேயே அபயம் தேடியிருந்தனர். அந்த பங்கர் வாழ்க்கை மிக மோசமானது. துயரமானது. மறக்க முடியாதது. பங்கர்களில் பதுங்கி இருந்து தமது உயிருக்காகப் போரடிய பலரும் அந்த அனுபவங்களை ஒரு வாழ்க்கைப் பதிவாக பங்கர் நூலில் எழுதியுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டவர்களுடைய அந்தப் பதிவுகளை பங்கர் என்ற நூலில் வெற்றிச்செல்வி தொகுத்து வெளியிட்டிருந்தார். இந்த நூல் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றுத்திறனாளிகளினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அரச பதிவு பெற்றுள்ள இந்த நிறுவனம், கடந்த பல வருடங்களாக மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கும் வாழ்க்கை நலனுக்காகவும் செயற்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக வெற்றிச்செல்வி சந்திரகலா செயற்பட்டு வருகின்றார்.

மன்னார்  காவல் நிலையத்தில்; வெற்றிச்செல்வி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அதேவேளை, மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவரையும்  காவல்துறையினர் அடம்பனில் வைத்து விசாரணை செய்துள்ளனர். இந்த அமைப்பின் செயற்பாடுகள், அதற்கான நிதி மூலம் என்று பல கோணங்களில் இந்த விசாரணை நடைபெற்றதாக அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

Tamil News