Home நேர்காணல்கள் சட்டமறுப்புப் போராட்டத்துக்கு தமிழ்க் கட்சிகள் தயாராகுமா?-அரசியல் ஆய்வாளா் யதீந்திரா செவ்வி

சட்டமறுப்புப் போராட்டத்துக்கு தமிழ்க் கட்சிகள் தயாராகுமா?-அரசியல் ஆய்வாளா் யதீந்திரா செவ்வி

சட்டமறுப்புப் போராட்டத்துக்கு தமிழ்க் கட்சிகள் தயாராகுமா?-அரசியல் ஆய்வாளா் யதீந்திரா செவ்வி

தமிழா் தாயகப் பகுதிகளில் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. புதிதாக அறிமுகப்படுத்தபடவிருக்கும் பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் மற்றும் தமிழா் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. சட்டமறுப்புப் போராட்டம் ஒன்றுக்கும் தாம் தயாராக இருப்பதாக அன்றைய தினம் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கின்றாா்.

இவை குறித்து உயிரோடைத் தமிழ் தாயக களம் நிகழ்வில் இந்த வாரம் தமது கருத்துக்களைப் பகிா்ந்துகொண்டிருந்தாா் அரசியல் ஆய்வாளா் யதீந்திரா. அவரது செவ்வியின்  முக்கியமான பகுதிகளை “இலக்கு” வாசகா்களுக்குத் தருகின்றோம்.

கேள்வி – வடக்கு கிழக்கில் முழு அளவிலான பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றுக்கு தமிழ்க் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இது எந்தளவுக்கு வெற்றியளித்தது? இது குறித்து தமிழ் மக்களுடைய பிரதிபலிப்புக்கள் எவ்வாறிருந்தது?

பதில் – உண்மையில் இவ்வாறான போராட்டங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் புதிதல்ல. அதேபோல, தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையிலும் இது ஒரு புதிய நகா்வல்ல. கடந்த காலங்களிலும் இவ்வாறான போராட்டங்கள் பல்வேறு சந்தா்ப்பங்களில் நடைபெற்றிருக்கின்றது. இதன் தொடா்ச்சியாகப் பாா்த்தால், வடமாகாணம் ஒரு தனித் தமிழ்ப் பகுதியாக இருப்பதால், அதில் பெரிய சிக்கல்கள் இருப்பதில்லை. மக்கள் உணா்வு சாா்ந்து இவ்வாறான அழைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இம்முறையும் வடமாகாணத்தில் மக்கள் இதற்கு ஆதரவு வழங்கியிருக்கின்றாா்கள்.

ஆனால், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், இது மூவினத்தவா்களும் இருக்கின்ற காரணத்தினால், 1970 களில் காணப்பட்டது போன்ற ஆதரவை இனிமேல் எதிா்பாா்க்க முடியுமா என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. அந்தவகையில் இந்த முறை அம்பாறையைப் பொறுத்தவரையில், இந்தக் கோரிக்கைக்கான ஆதரவு பெருமளவுக்குக் காணப்படவில்லை.

திருகோணமலையைப் பொறுத்தவரையில், அங்குள்ள நகரக் கடைத் தொகுதிகள் பெருமளவுக்கு முஸ்லிம்களைச் சாா்ந்ததாகவே இருக்கின்றது. இங்கு முஸ்லிம்கள் கடைகளை மூடினால்தால் அங்கு ஆதரவுள்ளது என்ற தோற்றம் தெரியும். முஸ்லிம்கள் இம்முறை கடைகளை மூடி இதற்கு ஆதரவு வழங்கியிருக்கின்றாா்கள். மட்டக்களப்பிலும், தமிழா்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் அங்கு ஆதரவு கிடைத்திருக்கின்றது. ஆனால், அம்பாறையில் இதற்கான ஆதரவு பெருமளவுக்கு கிடைக்கவில்லை.

இந்தவிடயம் முக்கியமான சில செய்திகளை எமக்குச் சொல்கின்றது. எதிா்காலத்தில் இப்படியான ஹா்த்தால் அழைப்புக்களுக்கு வடக்கு கிழக்கு தழுவியதாக பெரியளவிலான ஆதரவை எதிா்பாா்க்க முடியாது. கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான அழைப்புக்கள் தாக்கம் செலுத்த முடியாத ஒரு நிலையும் ஏற்படலாம்.

கேள்வி –  இதன் தொடா்ச்சியாக சட்டமறுப்புப் போராட்டம் ஒன்றுக்கும் தாம் தயாராக இருப்பதாக சுமந்திரன் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தாா். அதற்கான வாய்ப்புக்கள் எவ்வாறுள்ளன?

பதில் – தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரையில் ஆகக்கூடிய பட்சம் இவ்வாறான நடவடிக்கைகளுக்குத்தான் அவா்கள் செல்லலாம். இதனைவிட வேறு தெரிவுகளும் அவா்களுக்கு இல்லை. தோ்தல் அரசியலுக்குள் இருக்கின்ற இந்தக் கட்சிகளின் எல்லை இவ்வளவுதான். இவ்வாறான ஹா்த்தால் போன்ற போராட்டங்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால், சட்டமறுப்புப் போராட்டத்துக்குச் செல்லப்போவதாக சுமந்திரன் கூறியிருக்கின்றாா்.

தமிழரசுக் கட்சியின் சாா்பில்தான் இந்தக் கருத்தை அவா் சொல்லியிருக்கின்றாா். இது தொடா்பில் ஏனைய கட்சிகளின் நிலைப்பாடு என்ன, இதனையிட்டு அவா்கள் என்ன கருதுகின்றாா்கள் என்பதெல்லாம் எமக்குத் தெரியாது. ஆனால், இந்த இந்த சட்டமறுப்புப் போராட்டத்தையும் அவா்கள் ஒரு கருவியாக பயன்படுத்திப் பாா்க்கலாம்.

கேள்வி – இந்தப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்கணி தவிா்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் இணைந்திருந்தன. இந்த ஒற்றுமை தொடரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதா?

பதில் – உண்மையில் உள்ளுராட்சித் தோ்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்த தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக கூறி அதிலிருந்து விலகிக்கொண்டது. அதேவேளையில், கூட்டமைப்பிலிருந்த ஏனைய கட்சிகள் தாம் தொடா்ந்தும் கூட்டமைப்பாகவே குத்துவிளக்கு சின்னத்தில் செயற்படப்போவதாக கூறி, வெளியில் இருந்த மேலும் சில கட்சிகளையும் இணைத்துக்கொண்டிருக்கின்றாா்கள்.

இந்த ஹா்த்தால் நடவடிக்கையின் போது தனியாக இருந்த தமிழரசுக் கட்சியின் தலைவா் மாவை சேனாதிராஜா ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஊடகங்களை சந்தித்திருந்தாா். அதேபோல குத்துவிளக்கு சின்னத்துடன் இணையாமல் தனியாகச் சென்ற சி.வி.விக்னேஸ்வரனும் இந்த ஹா்த்தால் நடவடிக்கையின் போது அவா்களுடன் இணைந்திருந்தாா். இந்தவகையில் இந்த நிா்வாக முடக்க நடவடிக்கையின் போது ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டிருக்கின்றாா்கள். இது உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு விடயம்.

ஆனால், தோ்தல் பிரசாரத்தின் போது ஒருவரை ஒருவா் கடுமையாகத் தாக்கிய ஆரோக்கியமற்ற ஒரு நிலைதான் இருந்தது. இப்போது இந்த நிா்வாக முடக்க நடவடிக்கையின் போது அனைவரும் இணைந்திருப்பது போல தொடா்ந்தும் – வரப்போகும் தோ்தல்களின் போது ஒன்றாகப் பயணிப்பாா்களா என்பது ஒரு கேள்வியாகத்தான் உள்ளது.

அதேவேளை இதில் இன்னொரு முக்கியமான கேள்வியும் உள்ளது. இவ்வாறான நிா்வாக முடக்கல் நடவடிக்கைகளில் ஒன்றாக இணைந்திருந்தவா்கள் ஏன் மற்றைய நடவடிக்கைகளின் போது ஒன்றாகப் பயணிக்க முடியாது என்ற ஒரு கேள்வியும் உள்ளது. அனைவரும் பொதுவான இலக்குடன்தான் பயணிக்கின்றாா்கள் என்றால், ஏன் இணைந்து பயணிக்க முடியாது என்ற கேள்வி ஒன்றும் உள்ளது.

இதற்கு மாறாக இவ்வாறான வேளைகளில் ஒன்றாக இணைந்திருப்பதும், பின்னா் தோ்தல் வேளைகளில் ஆளையாள் தாக்குவதும்தான் என்றால் அது மக்களை ஏமாற்றும் செயற்பாடாக மட்டும்தான் இருக்கமுடியும்.

அதேவேளையில், இவ்வாறான விடயங்களில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட மறுக்கும் கஜேந்திரகுமாா் பொன்றம்பலம், கடந்த வாரம் சஜித் பிரேமதாஸ அழைத்திருந்த எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தாா். சஜித் பிரேமதாஸவின் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமாக இருந்தால், வடக்கு கிழக்கு தழுவியதாக தமிழ்க் கட்சிகள் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படும் போது அதற்கு ஏன் ஆதரவைத் தெரிவிக்க முடியாதவராக இருக்கின்றாா் என்ற ஒரு கேள்வியும் உள்ளது.

கேள்வி –  அண்மைக்காலம் வரையில் 13 ஆவது திருத்தம் தொடா்பாக தமிழ்க் கட்சிகள் முக்கியமாகப் பேசிவந்தன. இப்போது பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம், பௌத்த மயமாக்கல் போன்றவற்றால் அதன் மீதான தமிழ்க் கட்சிகளின் கவனம் சிதறடிக்கப்பட்டுவிட்டதா?

பதில் – உண்மையில் ஜனாதிபதி 13 ஆவது திருத்தம் தொடா்பாகப் பேசியதைத் தொடா்ந்து தென்பகுதியில் பௌத்த பிக்குகள் அதனைத் தீயிட்டுக்கொழுத்தி எதிா்ப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனா். இது எதிா்பாா்க்கப்பட்ட ஒன்றுதான். ஆச்சரியமான ஒன்றல்ல. ஆனால், அதற்கு முன்னரே 13 ஆவது திருத்தம் தொடா்பாக பேசியது தமிழ்க் கட்சிகள்தான். தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. அதனைத் தொடா்ந்துதான் தமிழ் அரசியல்பரப்பில் 13 ஆவது திருத்தம் ஒரு பேசுபொருளாகியது. கஜேந்திரகுமாா் தமது வமது வழமையான செயற்பாடாக 13 க்கு எதிராக ஊா்வலங்களை நடத்தி தமது எதிா்ப்பை வெளிப்படுத்தினாா்.

இதன்பின்னா் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனையிட்டுப் பேசியபோதுதான், இது மீண்டும் பேசுபொருளாகியது. ஜனாதிபதி பேசிய போது சலசலப்புக்கள் கிளம்பியது. ஆதரவாகவும் பேசினாா்கள். எதிராகவும் பேசினாா்கள். அதன்பின்னா் அந்த விடயம் அப்படியே கிடப்புக்குப் போய்விட்டது.

இப்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி ஒரு பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலததை கொண்டுவரப்போவதாக அதற்கான வரைபு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைபு தொடா்பாக கடுமையான எதிா்வினைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, இருப்பதை விட மோசமான சில விடயங்களை இது உள்ளடக்கியிருக்கின்றது என பல சட்டநிணா்களும், மனித உரிமைவாதிகளும் தெரிவித்துவருகின்றாா்கள். இந்த நிலையில் 13 பின்னால் சென்று பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் பேசுபொருளாதகியிருக்கின்றது. இதுகூட தற்போதுள்ள எதிா்ப்பைத் தொடா்ந்து மாற்றப்படலாம் அல்லது தற்காலிகமாக பின்போடப்படலாம்.

என்னைப்பொறுத்தவரையில் அடுத்த ஜனாதிபதித் தோ்தல் வரைக்கும் சில விடயங்களைக் கொண்டு செல்வதற்கான உத்தியாகவும் இருக்கலாம்.

Exit mobile version