காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் வருவார்களா?

காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் வருவார்களா? ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் நடைபெற்ற போர்க் காலத்தில் பெருமளவிலான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அத்துடன் 2009ஆம் ஆண்டு  இறுதிப் பகுதியில் பலர் இராணுவத்தி னரிடம் சரணடைந்தனர். பலர்  அவர்களிடம் கையளிக்கப்பட்டனர்.  அவர்களும்   காணாமல் ஆக்கப் பட்டுள்ளனர்.

இதையடுத்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரியும், தம் உறவுகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்து தமிழர் தாயகப் பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

210722 Vavuniya FoD day1616 3 காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் வருவார்களா?

இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில்  2017.02.24 ஆம் திகதியும், கிளிநொச்சி  மாவட்டத்தில்  2017.02.20 அன்றும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2017.03.08 அன்றும்  சுழற்சி முறையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் இன்றும் தொடர்ச்சியாக பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் இடம்பெற்று வருகின்றன.

வவுனியா  மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 614  பேர் தமது உறவினர்கள் காணாமல் போயுள்ளதாக ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளனர்.  இவர்களில் 21 பேர்  இதுவரையில் தமது உறவுகளைக் காணாமலேயே மரண மடைந்துள்ளனர்.

அதே போன்று  கிளிநொச்சியில்  1600 இற்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்து தம் உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும்  தம் உறவுகளுக்கான நீதி கோரி 1500இற்கு மேற்பட்டவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 17 பேர் நீதி கிடைக்காமல் இறந்துள்ளனர்.

இவ்வாறு வடக்கில் மட்டுமல்ல, கிழக்கிலும்  காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமக்கான நீதி கோரி இன்னமும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்களுக்கான நீதி இதுவரை எட்டப்படவில்லை. இவர்களுக்கான நீதியினை பெற்றுக் கொடுக்கவோ  காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை வெளிக் கொண்டு செல்லவோ எம் தமிழ் அரசியல் தலைமைகள் யாரும் தயாராக இல்லை. அவர்கள்  தயாராக இருந்தாலும், கேட்பதற்கோ அல்லது அவர்களுக்கான தீர்வினை வழங்கவோ  இலங்கை அரசும் தயாராக இல்லை.

ஆகவே சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  நாளை நினைவு கூரும் இன்றைய நாளில், இலங்கையில்  காணாமலாக்கப் பட்டவர்களின் உறவினர்கள்  சர்வதேச த்திடம்  நீதி கோரி நிக்கின்றனர்.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021