உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்: 15.10.2021 ஆம் நாள் பன்னாட்டு வெள்ளைப் பிரம்புப் பாதுகாப்பு நாளினை வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினர் கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய செயலகத்தில் கடைப்பிடித்தார்கள். இப் புதிய செயலகத் திறப்பு விழாவும், அன்றையநாள் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பார்வையற்ற குடும்பங்களின் நலன்களைப் பேணும் நோக்கோடு உருவாக்கப்பட்ட இச்செயலக நிர்மாணப் பணிக்கான செயற்திட்டத்தினை லண்டன் தாயகமேம்பாட்டு அணியினர் பொறுப்பேற்று, இதற்கான நிதித்திரட்டலை புலம்பெயர் உறவுகளிடமிருந்து மேற்கொண்டிருந்தார்கள்.
இவர்களின் நிதிப் பங்களிப்பில் உயிரூட்டம் பெற்ற இச் செயலகத்தின் பெயர்ப் பலகையினை நிகழ்வில் கலந்து சிறப்பித்த கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேசசபை தலைவர் திரைநீக்கம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் அவர்களும் கொடையாளிகள் சார்பில் ஆசிரியர் சஜிகரன் அவர்களும் இணைந்து நாடாவினை வெட்டிக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்கள். மங்கள விளக்கேற்றியதையடுத்து, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக உயிர்க் கொடை செய்த அனைவருக்கும் அகவணக்கம் செய்யப்பட்டது.