பயங்கரவாத தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும்போது மகிந்த குடும்பமே சிக்கும் – சிறிதரன்

பயங்கரவாத தடைச் சட்டமானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது விவாதத்துக்கு வரும்போது பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள மகிந்த குடும்பமே அதற்குள் சிக்கி, சிறை செல்லும் நிலை ஏற்படலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.  

கிளிநொச்சியில் நேற்று (16) கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது இவ்வாறு கூறிய அவர், மேலும் பேசுகையில்,

அடுத்தடுத்த வாரங்களில் மிக மிக ஆபத்தான பயங்கரவாத தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவரப்படும்போது, அது விவாதத்துக்கு விடப்படும். அப்போது அதற்கு பெரும்பான்மை பலம் தேவைப்படும்.

இந்நிலையில் இப்போது, பெரும்பான்மை வாக்குகளை அளிக்கக்கூடிய மஹிந்த ராஜபக்ஷ குடும்பமே இந்த சட்டத்துக்குள் அகப்பட்டு சிறை செல்லும் நிலை ஏற்படலாம்.

ஏற்கனவே, ஜே.ஆர். ஜெயவர்தனவினால் பாராளுமன்றத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை வைத்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கொன்று குவித்துத் தள்ளியுள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உள்ள எதிர்கால சிந்தனை வேறு; மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திடம் உள்ள எதிர்கால சிந்தனைகள் வேறு. அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டால் இந்த சட்டத்தை பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ரணில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியாக தான் வரவேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார். அவ்வாறான முயற்சிகளில் எந்த ஒரு தேர்தலையும் தற்போது நடத்துவதற்கு அவர் தயாராக இல்லை.

ஏற்கனவே, இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் மிக மிக ஆபத்தான சட்டமாகவே இப்புதிய சட்டம் உள்ளது.

தனிநபர் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.