பொ. ஐங்கரநேசன்
கேள்வி:
சூழலுக்கு எதிராக மக்கள் வாழ முற்படும் போது ஏற்படும் நோய்களில் ஒன்றான புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன என்று கூறுவீர்களா?
பதில்:
மருத்துவ நிலையங்களில் பெறப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் புற்றுநோய் அதிகரித்திருக்கின்றது என்பது உண்மை. இதற்கான காரணங்களில் ஒன்றாக விவசாய முறையையும் சொல்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த விவசாயிகளையும் பழி சொல்ல முடியாது. ஏனெனில், எங்கள் நாட்டைத் தாங்கி நிற்பவர்கள் இந்த விவசாயிகள் தான். மிக அதிகளவான இரசாயன மற்றும் அசேதனப் பசளைகளை பாவிப்பவர்கள் யாழ்ப்பாண விவசாயிகள் தான் என்பது கணிப்பீட்டின்படி உண்மையாக உள்ளது. ஒருவருக்கு நோய் வந்தால் மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்றுப் பாவிக்க முடியாது. அதற்கு வைத்தியரின் சான்றிதழ் தேவையாக உள்ளது. ஆனால் இந்த பூச்சிநாசினி விற்பனை நிலையங்கள், அசேதனப் பசளை விற்பனை நிலையங்களில் நாங்கள் போய் எவ்வளவு வேண்டுமானாலும், வாங்கலாம். இதனால் அளவிற்கு அதிகமாக இந்த இரசாயன உரங்களைப் பயன்படுத்துகின்றோம். அது நிலத்தடி நீரைச் சென்றடைகின்றது.
கேள்வி:
முன்னர் எங்கள் தாயகத்தில் தன்னிறைவுப் பொருளாதாரம் இருந்தது. உதாரணமாக ஒரு வீட்டிற்குத் தேவையான பால், முட்டை, பழ மரங்கள் இருக்கும். கிணறு இருக்கும். கிணற்று நீரைக் கொண்டே பழமரங்களை வளர்ப்போம். குப்பைகளை மரங்களுக்கு உரமாக்கி தன்னிறைவு கண்டோம். ஆனால் இப்போது இவ்வாறான தன்னிறைவு பெற்ற வீடுகள் இருக்கின்றதா?
பதில்:
நாங்கள் தன்னிறைவு வீடுகளாகவே இருந்தோம். நாங்கள் தற்போது உயிர்வேலிகள் என்ற பசுந்தாள் வேலிகளை அழித்து விட்டோம். தற்போது பண்ணையாளர்கள் வளர்க்கிறார்கள். அவர்கள் கொழும்பிலிருந்து கால்நடைத் தீவனங்களைப் பெற்று விலங்குகளுக்குக் கொடுக்கிறார்கள். அதேநேரம் எங்களில் கழிவுகளை சேமித்து கூட்டெருவாகப் பாவிப்போம். ஆனால் தற்போது அவ்வாறு செய்ய முடியாது. டெங்கு போன்ற நோய்த் தொற்றுக் காரணமாக இவ்வாறான செயற்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது. மழை பெய்யும் காலங்களில் வெள்ளம் வந்து குளங்களை நிரப்பி, மேலதிகமான நீர் கடலுக்குள் செல்லும். ஆனால் தற்போது வீதியால் வெள்ளம் பாய்ந்து நேராகக் கடலுக்குள் செல்கிறது. குளங்களுக்குச் செல்வதற்கான வாய்ககால்கள் அடைக்கப்பட்டுள்ளன.
மற்றுமோர் பிரச்சினையாக உள்ளது என்னவெனில், தற்போது நாங்கள் குடியிருக்கும் காணிகளின் அளவு சிறியதாகி உள்ளது. மூதாதையர் தங்கள் காணிகளை பிள்ளைகளுக்கு சீதனமாகப் பிரித்து கொடுத்து வந்ததையடுத்து தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிணறு அமைப்பதற்கு இடம் போதாமையால், குழாய்க் கிணறை அமைத்து வருகின்றனர். இந்த முறை ஆழக் குழி தோண்டி அடி நீரை உறுஞ்சுகின்ற ஒரு முறை. இதனால் கடல்நீர், உவர் நீர் உட்புகும் நிலை ஏற்படும். இதைத் தடுப்பதற்கு சட்டரீதியான பொறிமுறை எங்களிடம் இதுவரை இல்லை. ஆனால் பொது நீர் வழங்கல் முறையை ஏற்படுத்துவதன் ஊடக தற்போதுள்ள சவால்கள் காலப்போக்கில் களையப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
கேள்வி:
தாயக மக்களிடம் சூழல் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும், இயற்கை சாரந்து வாழ்வதற்கான விழிப்புணர்வையும் வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்கள், முயற்சிகள் என்ன?
பதில்:
மேற்குலக நாடுகள் தங்களை சுத்தப்படுத்தி அடுத்தவனை அசுத்தப்படுத்தும் வேலைகளைத்தான் செயற்படுத்தி வருகின்றார்கள். எமது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து சென்று அங்கு வாழ்பவர்கள் அந்த நாட்டின் நடைமுறைகளை, சூழலியல் சட்டங்களை அறிந்தவர்கள் என்பதால், எங்களை விட அவர்கள் கூடுதலான அறிவு பெற்றவர்களாக இருப்பார்கள். போரின் போதும், போரிற்குப் பின்னரும் எங்களைத் தாங்கிக் கொண்டிருப்பது புலம்பெயர் சமூகம் தான். இங்கு நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னாலும் இருப்பது புலம்பெயர்ந்தவர்களுடைய பணம் தான்.
தற்போது ஆசிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களுக்கும், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கி வருகின்றது. வெளிநாடுகளிலிருந்து எனது மாணவர்களும், நண்பர்களும் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும் பணத்தால் தான் நாங்கள் அதனைச் செய்து கொண்டிருக்கின்றோம். யுத்தத்தின் போதல்ல. யுத்தத்திற்குப் பின்னரும் அவர்களின் பங்களிப்பு ஏதோ ஒரு வகையில், நாட்டை செழுமைப்படுத்துவதில், வளப்படுத்துவதில், எங்களுடைய மக்களின் வறுமையைத் தீர்ப்பதில் பங்கேற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. சூழல் குறித்தும் அவர்கள் தங்களின் அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பகிர்ந்து கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் தற்போது மோட்டார் சைக்கிள் பாவனை அதிகரித்துள்ளதற்குக் காரணம் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் உறவுகளுக்கு அனுப்பி வைத்த பணம் தான். அவற்றை இவர்கள் மட்டுப்படுத்த வேண்டும். இங்கே சூழல் சார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போது, அடையாளம் கண்டு தங்களின் அறிவு சார்ந்த துறைகள் ஊடாகவோ, தங்கள் பொருண்மியத்தின் ஊடாகவோ இந்த நடவடிக்கையை மேம்படுத்த புலம்பெயர் தேசத்தில் இருக்கும் நமது உறவுகள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்காக துணிப்பைகளை வழங்கும் திட்டங்களை மேற்கொண்டிருந்தோம். என்னுடன் படித்த மாணவன் ஒருவர் 1000 துணிப்பைகளை தயாரிப்பதற்கான பணத்தை அனுப்பியிருந்தார். எங்கள் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் கிராமக் குழுக்கள் இருக்கின்றன. சனசமூக நிலையங்கள் இருக்கின்றன. இவர்கள் ஊடாக அந்தந்தப் பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கக்கூடிய எமது உறவுகள் சூழல் சார்ந்த விடயங்களிலும் இனிமேல் அக்கறை செலுத்த வேண்டும் என்று உங்களின் ஊடகத்தின் ஊடாக நான் கேட்டுக் கொள்கிறேன்.