Home செய்திகள் திருகோணமலை எண்ணெய் குதங்கள் குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? பாராளுமன்றத்தில் கேள்வி

திருகோணமலை எண்ணெய் குதங்கள் குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? பாராளுமன்றத்தில் கேள்வி

எண்ணெய் குதங்கள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன?திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பெற்றுக்கொள்வதாக அரசு தெரிவி்த்தபோதும் இதுவரை பெற்றுக்கொள்ளமவில்லை . அப்படியானால் திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? சீனா, அமெரிக்காவுக்கு நாட்டின் ஏனைய வளங்களை வழங்கியுள்ளதுபோல் இந்திய அரசுடன் இது தொடர்பில் வேறு ஏதாவது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான கபீர் ஹாசிம் வலுறுத்தினார்

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு, வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,

இந்தியாவுக்கு வழங்கி இருக்கும் திருகோணமலை எண்ணெய்க்குதங்களை மீளப் பெற்றுக் கொள்வதாக அரசு தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தற்போது எமது அரசின் காலத்தில் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அதனை மீளப்பெற முடியாதுள்ளதாக தெரிவித்து, அதனை தட்டிக்கழித்து வருகிறது. எமது அரசின் காலத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தியாவுடன் அது தொடர்பில் புரிந்துணர்வு கடிதப் பரிமாற்றங்களே நடைபெற்றுள்ளன. எந்தவித ஒப்பந்தமும் எமது அரசு செய்யவில்லை.

எனவே இந்த அரசு அவற்றை மீளப்பெற்றுக் கொள்வதற்கு எமது அரசின் கால புரிந்துணர்வு கடிதப் பரிமாற்றங்கள் எந்தவித தடையையும் ஏற்படுத்தப் போவதில்லை. மற்றும் தற்போதைய அரசு கூறுவதுபோல் எமது அரசும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் மேற்படி எண்ணெய்க்குதங்களை வழங்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ அரசு கொழும்புதுறைமுக நகர நிலத்தை சீனாவுக்கு உரித்துரிமையாக வழங்கி இருந்தது. அந்த உரித்துரிமையை இல்லாமலாக்குவதாக நாங்கள் அன்று வாக்குறுதி அளித்தோம். அதேபோன்று ஆட்சிக்கு வந்ததுடன் சீனாவுடன் மோதி, துறைமுக நகரின் உரித்துரைமையை இல்லாமலாக்கி குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

ஆனால் இந்த அரசு திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பெற்றுக்கொள்வதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்த போதும் இதுவரை அவற்றை பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றது. அப்படியானால் திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன ? சீனா, அமெரிக்காவுக்கு நாட்டின் ஏனைய வளங்களை வழங்கியுள்ளது போல் இந்திய அரசுடன் அது தொடர்பில் வேறு ஏதாவது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் அரசு நாட்டுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

Exit mobile version