திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பெற்றுக்கொள்வதாக அரசு தெரிவி்த்தபோதும் இதுவரை பெற்றுக்கொள்ளமவில்லை . அப்படியானால் திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? சீனா, அமெரிக்காவுக்கு நாட்டின் ஏனைய வளங்களை வழங்கியுள்ளதுபோல் இந்திய அரசுடன் இது தொடர்பில் வேறு ஏதாவது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான கபீர் ஹாசிம் வலுறுத்தினார்
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு, வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,
இந்தியாவுக்கு வழங்கி இருக்கும் திருகோணமலை எண்ணெய்க்குதங்களை மீளப் பெற்றுக் கொள்வதாக அரசு தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தற்போது எமது அரசின் காலத்தில் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அதனை மீளப்பெற முடியாதுள்ளதாக தெரிவித்து, அதனை தட்டிக்கழித்து வருகிறது. எமது அரசின் காலத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தியாவுடன் அது தொடர்பில் புரிந்துணர்வு கடிதப் பரிமாற்றங்களே நடைபெற்றுள்ளன. எந்தவித ஒப்பந்தமும் எமது அரசு செய்யவில்லை.
ஆனால் இந்த அரசு திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பெற்றுக்கொள்வதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்த போதும் இதுவரை அவற்றை பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றது. அப்படியானால் திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன ? சீனா, அமெரிக்காவுக்கு நாட்டின் ஏனைய வளங்களை வழங்கியுள்ளது போல் இந்திய அரசுடன் அது தொடர்பில் வேறு ஏதாவது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் அரசு நாட்டுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.