Home செய்திகள் வெந்நீரூற்று ஆக்கிரமிப்பு அரசின் இலக்கு என்ன?-அரசியல் ஆய்வாளா் யதீந்திரா செவ்வி

வெந்நீரூற்று ஆக்கிரமிப்பு அரசின் இலக்கு என்ன?-அரசியல் ஆய்வாளா் யதீந்திரா செவ்வி

திருமலையில் கன்னியாவில் அமைந்துள்ள வெந்நீரூற்று தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழா்களைப் பொறுத்தவரையில் இதனுடைய முக்கியத்துவம் என்ன? தொல்பொருள் திணைக்கள் எவ்வாறான இலக்குடன் இதனைச் செய்கின்றது? என்பன தொடா்பாக அரசியல் ஆய்வாளா் யதீந்திரா உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வில் கலந்துகொண்டு தன்னுடைய கருத்துக்களை முன்வைத்திருந்தாா்.

இதிலிருந்து முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்குத் தருகின்றோம்.

கேள்வி – தமிழ் மக்களின் முக்கிய புராதன இடங்களில் ஒன்றான திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை ஒரு சா்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்து தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த வெந்நீரூற்றின் முக்கியத்துவம் என்ன?

பதில் – இந்துக்களின் வாழ்விடமாக, அவா்களின் கலாசாரத்தை அடையாளப்படுத்துகின்ற கருதப்படுகின்ற திருகோணமலையைப் பொறுத்தவரையில், இந்த வெந்நீா் ஊற்று மட்டுமல்ல, கோணேஸ்வர ஆலயம், தம்பலகாமம் ஆலயம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு உள்ளது. இந்த வரலாறு என்பது இந்துக்களின் நீண்ட கால வாழ்வியலை அடையாளப்படுத்தும் தொல்பொருள் சான்றுகளாக இருக்கின்றன.

குறிப்பாக கன்னியா வெந்நீா் ஊற்றைப் பொறுத்தவரையில் அது அதற்கு பல புராதன கதைகள் இருக்கின்றன. இராவணனுடைய வரலாற்றினுாடாப அது பாா்க்கப்படுகின்ற ஒரு போக்கு இருக்கின்றது. அவைகள் எல்லாம் ஒரு நம்பிக்கைகள்.

கன்னியா வெந்நீரூற்று 2017 - புகைப்படப் பதிவு | ஜீவநதி geevanathy

அவைகளுக்கு அப்பால் இந்துக்கள் தொடா்ச்சியான ஒரு நீண்டகால காழ்வியலை இந்தப் பகுதியில் கொண்டிருக்கின்றாா்கள் என்பதற்கான அடையாளங்களில் கன்னியா வெந்நீரூற்றும் ஒன்று. அதனைவிட கீரிமலை போன்று – பிதிா்க் கடன் செய்வதற்கான ஒரு இடமாகவும் அங்குள்ள ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

திருகோணமலை என்பதே மலை உச்சியில் சிவன் அமா்ந்திருக்கின்றாா் என்ற அா்த்தத்தில் வந்த ஒன்று. ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றாக திருக்கோணேஸ்வரம் இருப்பது அதனை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றது.

சுருக்கமாகச் சொல்வதானால், இந்துக்களின் வாழ்வியலை, வரலாற்றை, கலாசாரத்தை அடையாளப்படுத்துகின்ற ஒரு முக்கியமான சின்னம்தான் இந்த கன்னியா வெந்நீரூற்று என்று சொல்ல முடியும்.

கேள்வி – இதனை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவந்திருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன?

பதில் – உண்மையில் இந்த கன்னியா வெந்நீரூற்று பிரச்சினை இப்போது தொடங்கியதல்ல. 2010 ஆம் ஆண்டிலிருந்தே இந்தப் பிரச்சினை தொடா்கின்றது. அப்போது இந்தப் பகுதியிலிருந்த பிள்ளையாா் ஆலயம் ஒன்றை புனரமைக்க முற்பட்ட போது, அங்கு விலகம் விகாரை என்ற பெயரில் விகாரை ஒன்று கட்டப்பட்டது. விகாராதிபதி அதில் தலையீடு செய்து பல குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தாா்.

இவ்விடயம் தொடா்பாக ஆராய்வதற்கு முற்பட்ட தொல்பொருள் திணைக்களம் இந்தப் பகுதியில் பௌத்த சின்னங்கள் காணப்படுவதாக அறிவித்தது. இதனைத் தொடா்ந்து 2011 ஆம் ஆண்டு இது ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் பிரதேசம் என தொல்பொருள் திணைக்களம் வா்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டது. இதனைத் தொடா்ந்து அந்தப் பகுதி தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் தொடா்ந்தும் இருந்துவருகின்றது.

இவ்வாறு இருந்தாலும் உண்மையில் இந்தப் பிரதேசம் உப்புவெளி பிரதேச சபையின் நிா்வாகப் பகுதிக்குள்தான் வருகின்றது. இந்தப் பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில்தான் இருப்பது வழமை. இருந்த போதிலும் இந்தப் பிரதேச சபையின் கட்டுப்பாடு இப்போது மொட்டு அணியிடம் சென்றுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் பிரதேச சபையும் செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலையில் இருக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது வெந்நீரூற்றுப் பகுதியை முழுமையாக அதற்கான பற்றுச்சீட்டு வழங்குவது போன்றவற்றையும் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதாக தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், பிரதேச செயலகம் இனிமேல் இதில் தலையீடு செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதியில் இந்துக்கள் எந்த வகையிலும் அதிகார ரீதியாக தலையிட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் விளைவு என்றுதான் நாம் பாா்க்க வேண்டும். ஏனெனில், வரலாற்று ரீதியாக இது போன்ற விடயங்களில் எமக்கு போதிய அனுபவம் இருக்கின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டு செல்லப்படுகின்ற இவ்வாறான விடயங்கள் மீண்டும் இந்துக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கிடையாது. ஆக, இது இந்துக்களின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக இந்தப் பகுதியை பிடுங்கி எடுப்பதுதான் நோக்கம்!

கேள்வி – இது தொடா்பாக பிரதேச சபையினால் சட்டரீதியாக எதனையும் செய்துவிட முடியாதா?

பதில் – பிரதேச சபைக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இது அமைந்திருப்பதால் பிரதே சபையால் சட்டரீதியாக எதனையாவது செய்ய முடியுமா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றுதான். இப்போது வா்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு இதனைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் தொல்பொருள் திணைக்கம் கொண்டுவந்திருக்கும் நிலையில், நிா்வாக ரீதியாக பிரதேச சபையால் தலையிட முடியுமா என்பதையும் ஆராயலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. பிரதேச சபை அதனுடைய இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கின்றது. அதேவேளை, பிரதேச சபையின் தலைவராக தற்போது இருப்பவரும் மொட்டுக்கட்சியின் ஒரு உறுப்பினா். ஆக, பிரதேச சபையினால் இவ்விவகாரத்தில் எதனையாவது செய்யக்கூடியதாக இருக்கும் என நான் கருதவில்லை.

கேள்வி – இவ்விடயத்தைப் பொறுத்தவரையில் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு – அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கின்றது?

பதில் – தமிழ்க் கட்சிகள் இது தொடா்பாக பல்வேறு சந்தா்ப்பங்களில் பேசியிருக்கின்றாா்கள். நாடாளுமன்றத்தில் கூட, இது தொடா்பாகப் பேசப்பட்டிருக்கின்றது. வழிபாட்டுச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் எல்லாம் பேசப்பட்டிருக்கின்றது. இதனை பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற வகையிலான முன்னேற்றத்தை எவராலும் அடைய முடியவில்லை.

இவ்வாறான நிலையில் வெறுமனே நாடாளுமன்றப் பேச்சுக்கள், முறையீடுகள் என்பவற்றுக்கு அப்பால் விடயங்கள் முன்னோக்கிப் பயணிக்கவில்லை. இந்த நிலையில் இந்தப் பகுதி இப்போது நிா்வாக ரீதியாகவும் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இப்போது நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றது. இதனால், உல்லாசப் பயணத்துறையை விருத்தி செய்ய வேண்டும் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற வகையில் இவ்வாறான விடயங்களையெல்லாம் முழுமையாக மத்திய மயப்படுத்தி ஒரு வருமான மூலங்களாகக் காண்பிதித்து இவற்றை மத்திய அரசின் கீழ் கையகப்படுத்துகின்ற நிகழ்ச்சிகள்தான் இடம்பெறுகின்றது.

என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு ஆரம்பமாக இருக்கலாம். இது கோணேஸ்வரம் கோவிலை நோக்கியும் எதிா்காலத்தில் போகலாம். இதேபோன்ற ஒரு அணுகுமுறைதான் கோணேஸ்வரம் கோவிலை நோக்கியும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், இந்தியத் துாதுவா், அமெரிக்க துாதுவா் ஆகியோரின் வருகையைத் தொடா்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.அதிகளவுக்கு அது சா்வதேச கவனத்தைப் பெற்றதால், அவ்விடயத்தில் அரசாங்கத்தினால் உறுதியாகச் செயற்பட முடியாமல் போய்விட்டது. ஆனால், எதிா்காலத்தில் அது வேறு வடிவங்களில் தொடரலாம் என்பதற்கான ஒரு ஆரம்பமாக இதனைக் கருதலாம்.

Exit mobile version