Home செய்திகள் என்ன ஒரு அற்புத தேசம், என்ன ஒரு அற்புத ஆட்சி!

என்ன ஒரு அற்புத தேசம், என்ன ஒரு அற்புத ஆட்சி!

என்ன ஒரு அற்புத தேசம்

காணாமல் போன பிள்ளைகளின் தாய்மார்கள் அழுத அழுகை இன்னமும் என் நெஞ்சில் ஒலிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது முகநுாலில் கருத்து பதிவிட்டுள்ள அவர்,

“முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட மீது, யுத்தம் நடந்த 2008, 2009 காலத்தில், கொழும்பில் வசதி படைத்த தமிழ் குடும்ப இளைஞர்கள் 11பேரை, கப்பம் பெறுவதற்காக, வெள்ளை வேன் மூலம் கடத்தி, கொலை செய்ததாக, குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு நடந்தது.

2008, 2009 வேளையில் எனது தலைமையிலான “மக்கள் கண்காணிப்பு குழு” இந்த கொடுமையை பதிவு செய்து உலகிற்கு அறிவித்தது. இதற்காக எனக்கும் அச்சறுத்தல் பரிசாக கிடைத்தது. “வந்து சுட்டு விட்டு போங்கடா” என நான் சொன்னேன்.

கடத்தப்பட்ட இளைஞர்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லை. காணாமல் போன பிள்ளைகளின் தாய்மார்கள் அழுத அழுகை இன்னமும் என் நெஞ்சில் ஒலிக்கிறது. அன்றைய போராட்டங்கள் மனதில் நிழலாடுகின்றன.

2019ம் வருடத்தில் சட்டபூர்வமாக வசந்த கரனாகொட மீது சாட்டப்பட்ட இந்த குற்றச்சாட்டு மரண தண்டனைக்குரிய குற்றமாகும். இன்று, இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின், கடந்த மாதம் அவர் மீதான குற்றச்சாட்டுகளையும், வழக்கையும் சட்டமா அதிபர் வாபஸ் பெற்றார். கரனாகொட சுதந்திர மனிதனாக வெளியே வந்தார்.

இன்று அவரது “சாதனையை” பாராட்டி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட, வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன” என்ன ஒரு அற்புத தேசம், என்ன ஒரு அற்புத ஆட்சி என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version