இலங்கையில் சீரற்ற கால நிலை: அனர்த்தங்களால் 17 மாவட்டங்கள் பாதிப்பு

இலங்கையில் சீரற்ற கால நிலை

இலங்கையில் சீரற்ற வானிலையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களால் 17 மாவட்டங்களில் 150 பிர​தேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், 65, 704 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 34 ஆயிரத்து 640 ​பேர் பதிப்படைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பான 34 தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், அனர்த்தங்களில் சிக்கி 26 பேர் மரணமாகியுள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துமுள்ளனர் அத்துடன், 49 வீடுகள் முழுமையாகவும் 1,574 வீடுகள் பகுதியளவிலும் ​சேதமடைந்துள்ளன.

இலங்கையில் சீரற்ற கால நிலையால் ஏற்பட்ட வெள்ளம், கொஞ்சம், கொஞ்சமாக வடிந்துகொண்டிருக்கின்றது. கடந்த நாள்களில் நிரம்பி வழிந்த குளங்கள், நீர்த்தேக்கங்களில் 90 சதவீதமானவற்றின் வான் கதவுகள் மீளவும் மூடப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எனினும், சீரற்ற வானிலையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.