பேரறிவாளன், முள்ளிவாய்க்கால் 13 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டிருப்பதனை வரவேற்கின்றோம்-அருட்தந்தை மா.சத்திவேல்

முள்ளிவாய்க்கால் 13 ஆம் ஆண்டில் சிறை வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதனை மகிழ்ச்சியோடு வரவேற்பதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு ஈகை சுடரேற்றும் நாளிலேயே ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். இவ் விடுதலையை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மகிழ்ச்சியோடு வரவேற்பதோடு அவரின் விடுதலைக்காக உயிர் தியாகத்தோடு உழைத்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவிக்கின்றது

இந்திய சிபிஐ அதிகாரி தியாகராஜன் பேரறிவாளனின் சாட்சிப் பதிவை பிள்ளையாக பதிவிட்டமை பேரறிவாளனின் 30 வருட சிறை வாழ்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. அத்தோடு மாநில ஆளுநர் தன் கடமையை சரியாக செய்ய நிறைவேற்றாமையும் விடுதலை காலதாமதத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. அதிகாரிகளின் அசமந்தப் போக்கும் அரசியல் கை கழுவலும் உயிர்களோடு விளையாடும் விளையாட்டாக அமைந்துள்ளது என்பதும் பேரறிவாளனின் சிறைவாழ்க்கை நல்ல உதாரணமாகும். இவ்வாறானவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல தண்டிக்கப்பட வேண்டியவர்களுமே.

இலங்கையிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பத்து வருடங்களை கடந்த பின்னர் குற்றங்கள் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்ல இனவாத நோக்கில் புரியாத மொழியில் பதிவு செய்யப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் காரணமாக தண்டனை அனுபவிப்பவர்கள் இன்னும் பலர். வாழ்வு இறந்தவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், மரணித்தவர்கள் என பட்டியல் நீளுகிறது.

இந்நிலையில் இலங்கையில் இன நல்லிணக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு எதிராக இனவாத நோக்கில் பதியப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் வழக்குகள் காரணமின்றி இழுத்தடிப்பு செய்தல் என்பவற்றை மனசாட்சியோடு திருத்திகொள்ளும் போதே அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். அதுவே உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என்பதற்கான ஆரம்ப சான்றாகவும் அது அமையும்.

ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஆட்சியாளர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கைது செய்தல், சாட்சியங்களை பதிவுகள் செய்தல், வழக்குகள் நீண்ட காலம் இழுத் தடித்தல் என்பவற்றில் பிழைகள் நடந்துள்ளது என்பதால் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளின் விடுதலை அமைய வேண்டும்.

ஆனால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைந்தும் அழுது புலம்பி தமிழர்கள் ஈகைச்சுடர் ஏற்றும் நாளில் அரசு யுத்த வெற்றிக் களிப்புடன் இவ்வருடமும் தரைப்படை, கடற்படை, ஆகாயப் படையை சேர்ந்தோருக்கு பதவி உயர்வு கொடுத்திருப்பது தமிழர்களைக் பொறுத்தவரையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. அத்தோடு வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நாடு பொருளாதார ரீதியில் படு பாதாளத்திற்கு தள்ளப்பட்டு மக்கள் வீதியில் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில் யுத்தம் முடிவுற்று பதின் மூன்று வருடங்களை கடந்த பின்னர் யுத்த வெற்றி என முப்படையை சார்ந்தோருக்கு பதவி உயர்வு கொடுத்திருப்பது அரசியல் காரணங்களுக்காக அன்றி வேறொன்றுமில்லை. ஆட்சியாளர்கள் தம் ஆட்சியை நடத்துவது மக்களை நம்பி அல்ல படைகளை நம்பியே என்பது முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நாளில் மீண்டும் உறுதியாகியுள்ளது.

Tamil News