உலகிலேயே ஒழுக்கமற்ற இராணுவமாக, இலங்கை இராணுவத்தை பார்ப்பதாகவும். உலகில் எங்கும் எந்த இராணுவமும் உயிர்நீர்த்தவர்களின் உடலங்களை கிளறி எறியவில்லையெனவும். ஆனால் இலங்கை இராணுவம் அதனை முன்னெடுத்ததாகவும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்கும் பணிகள் தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மாவீரர் பணிக்குழுவினர், பொதுமக்களின் பங்களிப்புடன் சிரமதான அடிப்படையில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்ட கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் செய்து துப்புரவாக்கப்பட்டது. இதன்போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ.கஜேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், தவிசாளர்கள் உள்ளிட்ட குழுவினர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். மாவீரர் பணிக்குழுவினரும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதன்போ திருக்கோவில் காவல்துறையினர் ஸ்தலத்திற்கு வந்து குறித்த சிரமதான பணியை இடைநிறுத்துமாறு கோரினர். இந்த காணி சிரமதானம் காரணமாக ஏதாவது இனப் பிரச்சினை எழும் எனவும் அதனால் இப்பணியை நிறுத்துமாறும் அவர்கள் தெரிவித்தனர். எனினும் “இது எமது மண்ணுக்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூருகின்ற நிகழ்வு. இது எமது உரிமை. இதில் எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை” என்று மக்கள் பிரதிநிதிகள் கூறியதையடுத்து காவல்துறையினர் அங்கிருந்துசென்றனர். அதனை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்,
இந்த மாதம் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவுகூரும் புனிதமான மாதம். 2009ஆம் ஆண்டு வரையில் இந்த நினைவேந்தல்கள் பாரியளவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுவந்தது.
2009 மே 18இல் எமது உரிமைப் போராட்டம் இன அழிப்பின் ஊடாக முடிவுறுத்தப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கிலிருந்த அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலுமிருந்த வித்துடல்கள் இராணுவத்தினால் கிளறி எறியப்பட்டன. அதன் பின்னர் பல துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்,பல துயிலுமில்லங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கமுடியாத வகையில் இலங்கை அரசும் அதன் இராணுவமும் புலனாய்வுத்துறையினரும் நெருக்கடிகளை வழங்கிவருகின்றனர்.அதனையும் தாண்டி எமது புனிதர்களை நினைவுகூருவதை எமது மக்கள் முன்னெடுத்துவருகின்றனர்.
அந்த வகையில் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூரும் வகையில் துயிலும் இல்லங்கள் பல்வேறுதரப்பினராலும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரையில் மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்படும்.சகல தடைகளையும் தாண்டி நினைவேந்தல் உரிமையினை உறுதிப்படுத்துவதற்கு,தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காகவும் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும் உயிர்தியாகம் செய்துள்ளார்கள்.
அந்த இலட்சியத்தினை நாங்கள் முன்கொண்டுசெல்வோம் என்பதை உறுதிகொள்ளும் நாளாக இந்த நாள் அமையவேண்டும்.
இன்று பல மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவம் குடிகொண்டுள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள பல மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் குடிகொண்டுள்ளனர்.அந்த இடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேவேண்டும்.
இது இராணுவத்தின் ஒழுக்கமற்ற நடவடிக்கையினையே காட்டுகின்றது.இறந்தவர்களின் உடலங்களை கிளறி எரிந்ததாக உலகில் எந்த இராணுவமும் செய்ததாக நாங்கள் அறியவில்லை. பிரித்தானியா இந்த நாட்டினை 150வருடத்திற்கு மேல் அடிமைப்படுத்தி வைத்திருந்திருந்தாலும் கூட தோற்கடித்த எமது மன்னர்களின் சிலைகளைக்கூட நிறுவிவைத்துள்ளார்கள்.யுத்த மரபுகளை மீறியே யுத்ததினை செய்தது.யுத்தம் முடிந்த பின்னர் கூட உயிரிழந்தவர்களை நினைவுகூரமுடியாத வகையிலான அநாகரிமான செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றனர். இன்றும் துயிலும் இல்லங்களுக்கு மேல் அவர்கள் இருப்பதன் மூலம் உலகிலேயே ஒழுக்கம் அற்ற,நெறிகெட்ட இராணுவம் என்பதை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்திவருகின்றனர்.இந்த நிலைமை மாறவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.