மேய்ச்சல் தரையை பாதுகாக்க வேண்டும்
எதிர்கால சந்ததியின் நலன்கருதி இனமதத்திற்கு அப்பால் சிந்தித்து மேய்ச்சல் தரையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது காலத்தில் கட்டாயம் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கால்நடை பாற்பண்ணையாளர் சங்கத்தின் பிரத்தியேக செயலாளருமான சோ.புஸ்பராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த அவர், “மேய்ச்சல்தரை விடயத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை வழங்கியுள்ளேன். சம்மந்தமே இல்லாமல் நீதிமன்ற வழக்கொன்றிற்கு முகம் கொடுத்துள்ளேன்.
மருதமுனை தொடக்கம் சம்மாந்துறை மற்றும் பொத்துவில்வரை உணவுத்தேவைக்காக நாளாந்தம் 86 கால்நடைகள் தேவைப்படுகின்றது. வட்டமடு பிரதேசத்தில் இருந்து நாளாந்தம் 4200 லீற்றர் பால் பெறப்படுகின்றது. இதேநேரம் எதிர்காலத்தில் அதிகரிக்கும் சனத்தொகைக்கேற்ப உணவுக்காகவும் பாலுக்காகவும் தற்போது இருக்கின்ற கால்நடைகள் போதுமானதாக இருக்காது. ஆகவே சமூகத்தின்பால் அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனும் எதிர்கால சந்ததியின் நலன்கருதி இனமதத்திற்கு அப்பால் சிந்தித்து மேய்ச்சல் தரையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது காலத்தில் கட்டாயம். வளமுள்ள நமது பிரதேசத்தை சோமாலியா எத்தியோப்பியா நாடுகள் போன்று உருவாக்காமல் அதனை தடுப்பதற்கு கால்நடையாளர் சங்கம் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைக்க வேண்டும்” என்றார்.