‘எங்களுக்கும் வலி தெரியும்’ – நெருக்கடியிலும் உக்ரைன் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் இலங்கை மக்களின் மனிதம்

எங்களுக்கும் வலி தெரியும்

எங்களுக்கும் வலி தெரியும்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி  நிலவி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் இலங்கைத் தீவில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு இலங்கைவாசிகள் உதவி வருகின்றனர்.

உக்ரைனைச் சேர்ந்த சுற்றுலா பயணி விக்டோரியா மகரென்கோ. இவர் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கிய நேரத்தில், தனது கணவர் மற்றும் ஐந்து வயது மகளுடன் சுற்றுலாவிற்காக இலங்கைக்கு வந்துள்ளார். தற்போது உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தாய்நாடு திரும்ப முடியாத நெருக்கடியில் இலங்கையில் சிக்கி இருக்கிறார்.

தங்களின் கையிருப்பு குறைந்து வரும் வேளையில், சொந்த நாடு திரும்ப முடியாத அவலநிலையில், தங்களுடைய தலைவிதியை நினைத்து மகரென்கோ நொந்து போயிருக்கிறார். இந்த நிலையில், உள்நாட்டு நெருக்கடி,பொருளாதாரப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் நிலையிலும், இலங்கைவாசிகள் தங்களுக்கு உதவ முன் வருவதை சிலாகித்துப் பேசுகிறார் 35 வயதாகும் மகரென்கோ.

இதுகுறித்து அவர் “நான் இலங்கை மற்றும் அதன் மக்களை மிகவும் நேசிக்கிறேன். இங்குள்ள ஒவ்வொருவரும் எங்களுக்கு உதவ விரும்புகின்றனர். நான் தங்கியிருக்கும் விடுதியின் உரிமையாளர் நாங்கள் விரும்பும் வரை இங்கு தங்கியிருக்கலாம். எங்களிடம் போதுமான அளவு உணவும் தண்ணீரும் இருக்கிறது. பிரச்சினை இல்லை என்றார். இந்த மக்கள் தங்களுடைய இன்னல்களுக்கும் மத்தியில் எங்களுக்கு உதவுகின்றனர். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். அவர்கள் எங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்” என்கிறார்.

இலங்கையின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள டஜன் கணக்கான சுற்றுலா சார்ந்த வணிகம் செய்து வரும் நிறுவனங்கள், இலங்கையில் சிக்கித் தவிக்கும் உக்ரைனியர்களுக்கு சலுகைகள் அல்லது உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைன் பாஸ்போர்ட்டை காண்பிக்கும்போது, பாதி விலையில் உணவு வழங்கப்படுகிறது. அங்கிலுள்ள சில தங்கும் விடுதிகள், வெற்று அறைகளை ஒதுக்கித் தந்து உதவுகின்றன.

மிரிஸ்ஸவிலுள்ள பிளாக்கோல்ட் கஃபேயின் மேலாளர் அஹேஷ் ஷனகா கூறும்போது, “குழந்தையுடன் இருந்த ஓர் உக்ரைனியத் தாயிடம் நான், அவரது சொந்த நாடு திரும்பவில்லையா எனக் கேட்டேன். அதற்கு அவர், ரஷ்யத் தாக்குதலால் என்னுடைய வீடு அழிப்பட்டுவிட்டது. என்னால் திரும்பிச் செல்லமுடியாது என்றார்.

நாங்களும் அந்தத் தாயின் நிலையமையினைச் சந்தித்திருக்கிறோம். எங்களுக்கும் அந்தத் துன்பம், வலி தெரியும். எங்களுக்கும் கஷ்டம் இருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் எங்ளின் வாழ்வாதாரமும் வீழ்ச்சியைச் சந்திக்கிறது. எல்லாமே மோசமாக தான் இருக்கிறது. இருந்தாலும், எங்களைப் போலவே அவர்களும் மனிதர்கள் தான். அதனால் நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம்” என்கிறார்.

ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தின் தொடக்கத்தில், 15,000 ரஷ்யர்களும், 5000 உக்ரைனியர்களும் இலங்கைக்கு வந்திருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசும் இந்த இரு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் இலவசமாக விசா நீட்டிப்பு செய்துள்ளது.

உக்ரைனியர்களைப் போல, ரஷ்யார்கள் பலரும் இலங்கையின் தற்போது சிக்கியுள்ளனர். ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் சர்வதேச பணப்பரிவர்த்தனை முடக்கப்பட்டுள்ளதால் ரஷ்யர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் உள்ளனர்.

அந்நியச் செலாவணி பற்றாக்குறை, உணவுப்பொருள் விலையேற்றம்,  பெட்றோல் தட்டுப்பாடு  என பல பொருளாதார நெருக்கடிகள் இலங்கையின் சுற்றுலா மற்றும் அதைச் சார்ந்த வணிகங்களை மீண்டு எழமுடியுமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2009-க்கு முன்பு பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரின் நெருக்கடிகளை இலங்கைத் தீவுவாசிகளால் அத்தனை எளிதில் தூக்கி எறிந்து விட முடியாது. அந்த வலியின் துயரத்தை அவர்கள் அதிகம் உணர்ந்துள்ளதால், தங்களின் நெருக்கடியை மீறியும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிகிறது.

இதனை உண்மை என்கிறது, “அவர்களும் கடினமான சூழ்நிலையில் இருப்பதால், அவர்கள் மீது மிகுந்த இரக்கம் உள்ளது. வணிக உரிமையாளர்கள் எங்களை அன்பிலும் ஆதரவிலும் நிறைத்துள்ளனர். “நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்ற மற்றொரு உக்ரைனியரான டாரினா ஸ்டாம்புலியாக் கூற்று.

நன்றி- இந்து தமிழ் திசை Tamil News