Home செய்திகள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதையே ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் கூறுவோம்-சுமந்திரன்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதையே ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் கூறுவோம்-சுமந்திரன்

ஐரோப்பிய ஒன்றிய குழு

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பதனையே ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் வலியுறுத்துவோம் என இன்று அரசியல் கைதிகளை பார்வையிட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இராஜாங்க அமைச்சரொருவரால் அச்சுறுத்தப்பட்ட அரசியல் கைதிகளை இன்று (25) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவித்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன்,

இராஜாங்க அமைச்சரினால் துன்புறுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்து பேசியிருக்கின்றோம்.  கடந்த 12 ஆம் திகதி மாலை 6.05 மணியளவில் சிறைச்சாலைக்கு பொறுப்பாக உள்ள இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்கு சென்று பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இருக்கின்ற கைதிகளை தன் முன்பாக கொண்டு வந்து நிறுத்தி அவர்களை மிரட்டி அனைவரையும் முழங்காலில் நிற்க வைத்து மிக மோசமாக நடந்துகொண்ட சம்பவம் பற்றியும் அதில் இருவரை மிகவும் கூடுதலாக பயமுறுத்தி தன்னுடைய கைத்துப்பாக்கியை அவர்களின் தலையில் வைத்து சுடுவதற்கு ஆயத்தமான விடயங்கள் அனைத்தையும் நாங்கள் நேரடியாக கேட்டறிந்துள்ளோம்.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அறிந்துள்ளோம். மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. தற்போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமித்துள்ள விசாரணைக்குழுவும் விசாரணை செய்கின்றது. இதனைவிடவும் கூடுதலான விசாரணைகள் இடம்பெறும் என நாம் அறிகின்றோம். இந்த சம்பவங்கள் உண்மையாக இடம்பெற்ற நிகழ்வுகள் இதில் எவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

கடந்த பாராளுமன்ற தினத்தில் இவ்விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது இந்த விடயத்திற்கு பொறுப்பாக உள்ள அமைச்சரவை அமைச்சரான நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டார். இரண்டு தடவைகள் திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்டார். கைதிகளிடமும் அவர்களின் உறவினர்களுக்கு இதன் காரணமாக ஏற்பட்ட மன உழைச்சலுக்காகவும் மன்னிப்பு கேட்டார். ஆகவே நடக்காத விடயத்திற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இந்த சிறைச்சாலைகளில் இருந்து தமிழ் பிரதேச சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட வேண்டும். கொரோனா காலத்தில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர்கள் மாற்றப்பட்டு இருந்தவர்கள். எனவே யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற முடியாது என எவரும் சொல்ல முடியாது.

வவுனியாவில் உள்ளது விளக்கமறியல் சிறையே. அது சிறிய இடம். எனவே முன்னர் நிர்வாகத்திற்கு தேவையானதாக யாழ்ப்பாணத்திற்கு மாற்றியிருந்தது போல இவர்களது பாதுகாப்பு கருத்தியும் விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெற வேண்டுமாக இருந்தால் அவர்கள் அவ்வாறான சூழலுக்குள் மாற்றப்பட வேண்டும். எனவேதான் அவர்கள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க கூடியதாக இருக்கும். பயம் இல்லாமல் சாட்சியம் வழங்க கூடியதாக இருக்கும். வெளியில் இருக்கும் சாதாரண மக்களே சாட்சியம் வழங்க அச்சப்படும் சூழலில் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர்கள் அது குறித்து பயப்படுவது நியாயம் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

இவர்கள் நீண்ட காலமாக விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாமல் வழங்குகள் நிறைவு பெறாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள். அவர்களுக்கு எதிராக நீண்ட காலமாகியும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. வெறுமனே நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமறியல் நீடிப்பு மாத்திரம் நடைபெறுகின்றது. ஆகவே இவர்களது காலம் நீடிக்கப்படாமல் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். நாம் பல காலமாக கேட்டு வரும் விடயம் இது.

முற்றுமுழுதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோருகின்றோம். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது. அதனை நீக்குவதாக வாக்குறுதி கொடுத்து நீக்காத காரணத்தால்தான் ஐ எஸ் பி வரிச்சலுகை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு எதிர்வரும் வாரங்களில் இங்கு வருகின்றார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்புடனும் செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்பதனையே நாம் வலியுறுத்துவோம். அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கின்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

இதனை அரசாங்கம் செய்தால் மாத்திரமே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கிடைக்க கூடிய சில சலுகைகளை அவர்கள் கோரக்கூடியதாக இருக்கும். இது நாட்டு மக்களுக்கும் முக்கியமான விடயம். பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளும் நிலையில் வரிச்சலுகையும் இல்லாமல் போவது மக்களின் வயிற்றில் பாரிய அடியாக இருக்கும். ஆகவே அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதன் கீழ் உள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என நாம் கோருகின்றோம்” என்றார்.

Exit mobile version