Home செய்திகள் “நாங்கள் தோற்றுப்போனவர்கள் கிடையாது“ -பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கம்

“நாங்கள் தோற்றுப்போனவர்கள் கிடையாது“ -பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கம்

நாங்கள் தோற்றுப்போனவர்கள் கிடையாது

நாங்கள் தோற்றுப்போனவர்கள் கிடையாது. தற்சார்பு பொருளாதாரத்துடன் நிமிர்ந்து நிற்க கூடிய அத்தனை வழங்களும் தமிழர்களிடம் உள்ளது என தெரிவித்த  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் வடக்கு கிழக்கு  ஒருங்கிணைப்பாளரும் நல்லூர் சிவகுரு ஆதின முதல்வர் தவதிரு வேலன் சுவாமிகள், “ஆகவே எங்களை நாங்களே ஆளக்கூடிய நிலையை எங்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில்  மேலும் கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம். வரலாற்று பாரம்பரிய மக்கள் எமது பகுதியில் நாங்கள் சுயநிர்ணயுடன் கூடிய உரிமையுடன் தமிழர்கள் தலை நிமிர்ந்துவாழவேண்டும்.

எங்களது இனத்தை அழிக்கின்ற முயற்சியாகயிருக்கலாம், ஸ்ரீலங்கா அரசின் கட்டமைப்பின் ஊடாக நிலங்களை பறித்தெடுக்கின்ற செயற்பாடுகளாகயிருக்கலாம், வடகிழக்கில் இயற்கை வளங்கள் கொட்டிக்கின்றன.

அவற்றினை பறித்தெடுத்து இயற்கை சமநிலையினை குழப்புகின்ற செயற்பாடுகளாகயிருக்கலாம் இவைகள் நடக்கும்போது அரசியல் கட்சி என்ற பேதங்கள் மறந்து தமிழர்களாக நாங்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிராக குரல்கொடுக்கவேண்டும்.

அறத்திற்காகவும் நீதிக்காகவும் குரல்கொடுக்கும்போது நாங்கள் யாருக்காகவும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக நின்று குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ் தேசியத்தின்பால் நாங்கள் அனைவரும் ஒற்றுமைப்படவேண்டும்.இந்த பகுதிகளில் நடைபெறும் அநீதிகளை தட்டிக்கேட்கவேண்டும்.அவ்வாறானதொரு சூழலிலேயே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி போராட்டம் நடைபெற்றது. மக்கள் தன்னெழுச்சியாக தாங்களாக திரண்டார்கள். இனத்திற்கான விடுதலை உணர்வு என்பது எமது மக்களின் மத்தியில் இன்றும் இருக்கின்றது என்பதை ஒட்டுமொத்த உலகுக்கும் எடுத்துக்காட்டிய நிகழ்வு அந்த நிகழ்வு.

நாளை தலைவர்களாக வரவுள்ள பிள்ளைகள் தங்களது அறிவினையும் கல்வியையும் மேம்படுத்தும் அதேநேரம் அறம் என்று சொல்லப்படும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக யிருக்கவேண்டும்.

ஒரு கண் சமய வாழ்வாகயிருந்தால் ஒரு கண் தமிழாகயிருக்கவேண்டும். இவ்வாறான ஒரு வாழ்க்கையினை வாழும்போது இந்த மண்ணில் விடுதலையினைப்பெற்று அனைவரும் சுதந்திரமாக சுயநிர்ணய உரிமையுடன் எங்களது தலைவிதியை நாங்களே தீர்மானிக்கின்ற,எங்களை நாங்களே ஆளுகின்ற,பொருளாதார ரீதியில் தற்சார்பு பொருளாதாரத்தில் வளரக்கூடிய அத்தனை வளங்களும் எங்களிடம் உள்ளது.

நாங்கள் தோற்றுப்போனவர்கள் கிடையாது. அந்த அறம் என்றும் வெற்றி பெற்றேயாகும்” என்றார்.

Exit mobile version