Tamil News
Home செய்திகள் ராசபக்சேக்களுக்காக வாக்கு கேட்கும் முன்னாள் கிரிக்கற் வீரர் முரளி

ராசபக்சேக்களுக்காக வாக்கு கேட்கும் முன்னாள் கிரிக்கற் வீரர் முரளி

ராஜபக்சக்கள் 20 வருடங்களாக என்னுடன் நெருக்கமாக உள்ளனர்;அவர்களின் ஆட்சிதான் வரப்போகிறது, கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் கிரிக்கற் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு ஆதரவாக பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த முத்தையா முரளிதரன் மேலும் கூறியதாவது,

அரசியல் வாதிகள் தொடர்ந்து மக்களை லயன்களில் வைத்து அரசியல் செய்து வருவதாகவும் இந்த நிலைமையை மாற்ற முன்வர வேண்டும்.

நாம் அமைப்பொன்றை உருவாக்கி சேவையாற்றி வருகிறோம்.இன மத பேதமின்றி உதவி வழங்கப்படுகிறது.நான் அரசியல்வாதியல்ல.எமது மக்கள் ஏன் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டும்.அவர்களின் தலைவிதியா.

நான் பல உதவிகள் செய்தாலும் அதனை வெளியில்சொல்வதில்லை.  அரசியல்வாதிகள் மக்களுக்கு உதவுவார்கள் என எதிர்பார்த்தோம்.காலங்காலமாக மக்கள் அதே நிலையிலே உள்ளனர்.தேர்தல் நோக்கில் நான் மக்களுக்கு உதவ முன்வரவில்லை.

எமது மக்களுக்கு உதவக் கூடிய சந்தர்ப்பம் எழுந்துள்ளது.நான் பாடசாலை மாணவர்களுக்கு உதவ தயாரான போது இங்குள்ள அரசியல்வாதிகள் அதனை தடுத்துள்ளார்கள்.  ஜனாதிபதியினதும் பிரதமரதும் குடும்பத்தினர் 20 வருடங்களாக என்னுடன் நெருக்கமாக உள்ளனர்.

அவர்களின் ஆட்சிதான் வரப்போகிறது.எமது நுவரெலியாவில் சிங்கள,  தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.இப்பிரதேசத்தில் சேவையாற்ற முன்வருமாறு அவர்கள் அழைப்பு விடுத்தார்கள்.வடக்கு ஆளுநர் பதவி தந்தபோதும் மறுத்தேன்.அரசியலில் குதிக்கும் எண்ணம் கிடையாது.எனக்கு பதிலாக எனது தம்பியை இறக்கியுள்ளோம்.அவரூடாக மக்களுக்கு சேவையாற்றுவோம்.

தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலன்றி சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவோம்.

ஆதரவாக வாக்களிக்காமல் அமைச்சர்களிடம் சென்று உதவி கேட்க முடியாது.இந்த அரசில் தமிழ் மக்களும் பங்காளியாக வேண்டும்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்.இவ்வளவு காலமும் நான் நேர்மையாக நடந்துள்ளேன். என்றும் பொய் சொன்னது கிடையாது.

மலைய மக்களுக்காக லிந்துல தோட்டத்தில் பெரிய நிலமொன்று கிடைத்துள்ளது.அகடமி ஒன்றை ஆரம்பித்து மக்களுக்கு சேவையாற்ற இருக்கிறேன்.மலைய இளைஞர்களுக்கு திறமையுள்ளது.அவர்களை முன்னேற்ற வேண்டும்.  வசதியானவர்களுக்கு இவற்றுக்கு ஒத்துழைக்க முன்வரவேண்டும்.90 வீதமான மக்கள் லயன்களில் வாழ்வதோடு இன்னும் கையேந்தும் நிலையிலே உள்ளனர்.

மக்கள் வறுமையில் இருந்தால் தான் அரசியல்வாதிகளுக்கு நிலைக்க முடியும்.அரசாங்கம் வழங்கும் வீடுகளை கூட கட்டிக் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர்.

பல திட்டங்களை இப்பகுதியில் முன்னெடுக்க இருக்கிறோம்.உங்கள் உதவிகளை என்றும் மறக்க மாட்டேன்.கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவோம்.உங்களிடம் காசோ பணமோ கேட்கவில்லை. உங்கள் வாக்குகளை தான் கேட்கிறோம்.

ஜனாதிபதி வித்தியாசமானவர்.அவர் அரசியல்வாதியல்ல. அவர் கொழும்பில் பல சேவைகள் செய்தார்.விமல் வீரவங்ச என்னுடைய நண்பர்.அவரும் இம்மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறார் என்றார்.

இதன் போது தமிழ் வர்தகர்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்தார்கள்.அவற்றுக்கு அமைச்சர் விமல் வீரவங்ச தீர்வு வழங்கியதோடு சில பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்து தீர்ப்பதாக அறிவித்தார்.

இந்த சந்திப்பில் அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன்,புறக்கோட்டை துணி வியாபார உரிமையாளர் சங்க உப தலைவர் பீ.தியாகராஜா பிள்ளை,தங்க ஆபரண வர்த்தகர் சங்க செயலாளர் ரத்னராஜா சரவனம்,சிலோன் ஹாட்வயார் மர்சன்ட் சங்க தலைவர் அருளானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

 

Exit mobile version