கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி இயக்கச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

வடக்கு, கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு 100 நாள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்த 100 நாள் போராட்டத்தின் 58ஆவது நாளான நேற்று(27) கிளிநொச்சி இயக்கச்சி சந்தியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதில்,“வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” “ நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை.

இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ” “

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு      ஜனநாயக உரிமையாகும் ” “ 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்க துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.

 ” பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை இல்லாதொழிப்போம்” எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு  எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை  கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு அபகரிக்காதே என பல கோரிக்கைகளை இப்போராட்டத்தில் மக்கள்  முன் வைத்துள்ளனர்.

மேலும் “எமது  வடக்கு  கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வடக்கு  கிழக்கு  பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு  நீதியுடன்  கூடிய  அரசியல்  தீர்வு வேண்டி முன்னெடுக்கப்படும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு பெரும் சவாலாக இலங்கை அரச  படைப்பிரிவினரும், இலங்கை படைப்பிரிவுகளின் புலனாய்வினர்களும் செயற்படுவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகவே நாம் கருதுவதுடன், பாதிக்கப்பட்ட மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் உரிமைக்கான  குரல் வளையை  நசிக்கும் செயலாகவே நாம் இதனை  கருதுவதுடன், இவ்வாறான  செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அத்துடன் எமது “வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்”  எனும்  ஜனநாயக ரீதியான மக்கள் குரலுக்கு   இலங்கை ஜனாதிபதி   உதவ வேண்டும் எனவும் கோருகின்றோம்“  எனத் தொிவித்துள்ளனா்.