Home செய்திகள் காவல்துறையினரின் காவலில் உயிரிழந்த விதுசனின் உடலில் 31காயங்கள் இருந்ததாக தகவல்

காவல்துறையினரின் காவலில் உயிரிழந்த விதுசனின் உடலில் 31காயங்கள் இருந்ததாக தகவல்

காவல்துறையினரின் காவலில் உயிரிழந்த விதுசனின்

மட்டக்களப்பில் காவல்துறையினரின் காவலில் உயிரிழந்த விதுசனின் உடலில் 31காயங்கள் இருந்ததாக இன்றைய நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளதாக  சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் மாதம் 03ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து இளைஞர் ஒருவர் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் காவல்துறையினரின்  காவலில் உள்ளபோது உயிரிழந்திருந்தார்.

குறித்த இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பக்கட்டை விழுங்கியதால் அது வயற்றினுள் வெடித்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரால்  தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை குறித்த இளைஞனின் குடும்பத்தினர் மறுத்திருந்ததுடன் குறித்த இளைஞனை காவல்துறையினர் தாக்கியதாலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞனின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு   அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த விசாரணை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் விதுசனின் உடலில் 31வகையான காயங்கள் அறியக் கிடைத்துள்ளதாகவும் உயிரிழந்த இளைஞர் சார்பில் ஆஜரான   சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version