வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் – சார்ல்ஸ் எம்.பி

ஆலய வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலையத்தில் உள்ள அடையாளங்கள் தமிழர்களின் அடையாளங்கள் என்பதை சிங்கள தரப்பினர் ஏற்றுக்கொண்டு இன ரீதியான செயற்பாடுகளை அனுமதிக்காது, தொடர்ச்சியாக இந்துக்கள் இங்கு ஆலய வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று , வாய்மூல வினாக்களுக்கான விடைகள் நேரத்தில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன்,

“இலங்கையில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை முதலில் சிங்கள தரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிங்கள இதிகாசங்களில் தமிழர்கள் பௌத்தத்திற்கு தொண்டாற்றினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அவ்வாறு ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் தமிழ் நாட்டில் அவ்வாறு வாழ்ந்தார்கள், இது தமிழ் பௌத்தர்களின் அடையாளமே, இந்து ஆலையங்களில் உள்ள தமிழர்களின் அடையாளங்கள், தமிழர்கள் பௌத்தர்களாக இருந்த காரணத்தினால் தான் இந்த அடையாளங்கள் காணப்படுகின்றன.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலையத்தில் உள்ள அடையாளங்கள் தமிழர்களின் அடையாளங்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே வவுனியா மாவட்ட தொல்பொருள் திணைக்களம் இப்போது ஆலைய செயற்பாடுகளுக்கு தடை உத்தரவை எடுத்துள்ளது.

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அனுராதபுரம் மாவட்டத்தில் 20 இந்து ஆலையங்கள் இருந்ததாக தொல்பொருள் பதிவுகள் உள்ளன.ஆகவே இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு இன ரீதியான செயற்பாடுகளை அனுமதிக்காது, தொடர்ச்சியாக இந்துக்கள் இங்கு வழிபட அனுமதிக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் செயற்பாட்டில் இருந்த காலத்தில் கூட இந்த பிரதேசங்கள் முழுமையாக அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆனால் அங்கு தொல்பொருள் பகுதிகளை அழிக்கவோ அல்லது சிங்கள பௌத்த மக்களை எதிரிகளாக நினைத்து அவர்கள் செயற்பட்டதில்லை.

ஆனால் தற்போது சிங்களவர்கள் இலங்கையில் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தமிழர்களின் வழிபாட்டு இடங்களை சிங்கள மயமாக்க நினைப்பது தமிழர்களுக்கு இடம்பெறும் பாரிய அநீதியாகும்” என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள்,கிராமிய சிற்ப கலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க,

“இந்த விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் இப்போது எம்மால் இதனை கையாள முடியாது. தீர்ப்பு வரும் வரையில் நாம் அனைவரும் பொறுமையாக இருப்போம்” என்றார்

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் - சார்ல்ஸ் எம்.பி