வவுனியா: இதுவரை 49 பேர் கொரோனாவால் மரணம்

IMG 20210825 134139 வவுனியா: இதுவரை 49 பேர் கொரோனாவால் மரணம்

வவுனியாவில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதுடன் 3585 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாக வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் கொரோனா சமகால நிலைமை தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த  அவர், ‘கொரோனா தொற்றுநோய் தொடர்பாக இன்றைய தினம் ஆராயப்பட்டது. அந்தவகையில் 28 தரப்பினருக்கு ஊரடங்கு காலப் பகுதியில் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5500 பேர் இதுவரை கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவில்லை. அவர்களிற்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இராணுவத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நிதி எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்ட தகவல்களின் படி அதனை பெறுவதற்கு 17270  தகுதி பெற்றுள்ளனர். அதற்காக 16 மில்லியன் ரூபாய் நிதி முதற்கட்டமாக வழங்கப் பட்டுள்ளது. அதன்மூலம் முதற் கட்டமாக 8 ஆயிரம் குடும்பங்களிற்கு அந்த நிதியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இருதினங்களில் அந்த கொடுப்பனவை வழங்கி முடிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அந்தநிதியினை எமது உத்தியோகத்தர்கள் மூலம் நேரடியாகவே வீடுகளிற்கு சென்று வழங்குவார்கள்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் 3585 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 49 உயிரிழப்புக்கள் இடம் பெற்றுள்ளது. அத்துடன் 30 வயதிற்குட்பட்ட மேற்பட்ட 96 ஆயிரம் பேரில் 82 சதவீதமானவர்களிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-144-august-22-2021