இலங்கையில் பெருமளவான சிறுவர்கள் போஷாக்கின்றி பாதிப்பு

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பெருமளவான சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப் பட்டிருப்பதுடன் நாட்டின் மொத்த சிறுவர் சனத்தொகையில் அரைப்பங்கினர் ஏதேனுமொரு வகையிலான மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

மேலும் உணவுப்பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் 70 சதவீதமான குடும்பங்கள் உணவுப்பொருள் நுகர்வைக் குறைத்துக் கொண்டிருப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்துவரும் 7 மாதங்களில் அதிகரிக்கக்கூடிய சிறுவர்களின் தேவைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, 1.7 மில்லியன் சிறுவர்களுக்கு அவசியமான போசணை, சுகாதாரம், தூயகுடிநீர், கல்வி மற்றும் உளநலசேவை உள்ளிட்ட தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு 25.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குமாறு அவ்வமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

‘தற்போதைய நெருக்கடியானது இலங்கையிலுள்ள குடும்பங்களின் இயலுமை எல்லைமீது இழுவை விசையைப் பிரயோகித்திருக்கின்றது. சிறுவர்கள் பசியுடனும், வெறும் வயிற்றுடனும் உறங்குகின்றார்கள்.

பெரும்பாலான வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவசியமான மருந்துப்பொருட்கள் உள்ளடங்கலாக அநேகமான மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், சிறுவர்களால் உரியவாறு பாடசாலைகளுக்கும், வைத்தியசாலைக்கும் செல்லமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

இப்போது நாம் உடனடியாக செயற்படாவிட்டால் இந்த நெருக்கடியின் விளைவாக மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்கள் அதிக விலையைச் செலுத்தவேண்டிய நிலையேற்படும்’ என்று யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் எச்சரித்துள்ளார்.

இந்த நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னரே தெற்காசியாவில் மந்தபோசணையுடைய சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது.

அத்தோடு 5 இல் 2 சிசுக்கள் உரியவாறான போசணை கிட்டாத நிலையில் இருந்தனர். உணவுப்பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் 70 சதவீதமான குடும்பங்கள் உணவுப்பொருள் நுகர்வைக் குறைத்துக் கொண்டிருப்பதுடன், தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக கல்வி, சுகாதாரம் உள்ளடங்கலாக சிறுவர்களுக்கு அவசியமான சேவை வழங்கல்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தூய குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் நீர் மூலம் பரவக்கூடிய நோய்கள் தீவிரமடையக்கூடிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஏற்கனவே வறுமை, கோவிட் – 19 வைரஸ் பரவல் மற்றும் காலநிலை மாற்ற அனர்த்தங்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த பின்தங்கிய சிறுவர்கள்மீது தற்போதைய நெருக்கடிகள் எவ்வித பாகுபாடுமின்றி பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனவே எமது கோரிக்கையின் ஊடாக இலங்கையைச்சேர்ந்த சிறுவர்களுக்கு உதவமுன்வருமாறு அனைத்து நன்கொடையாளர்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என யுனிசெப் அமைப்பு  தெரிவித்துள்ளது.

Tamil News