அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள உயர்மட்ட அதிகாரி அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் பிரதி உதவிச்செயலர் அஃப்ரீன் அக்தர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ள அஃப்ரீன் அக்தர், இங்கு அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தெற்காசிய அரசுகளுக்கான அமெரிக்க நிதியத்தின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

இதன்போது குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்குவது பற்றிக் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட் கப்ரொத் கடந்த வார இறுதியில் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதியின் விஜயம் இதுவாகும்.