ஈரான் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா

மாஷா அமினி மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் குடிமக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு வரும் ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

மாஷா அமினியின் மரணம் காரணமாக, ஈரானில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பலரை ஈரான் அரசு கைது செய்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். மேலும், ஈரானில் இணையமும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாஷா அமினியின் மரணத்துக்கும், ஈரானில் போராட்டக்காரர்கள் மீது நடக்கும் வன்முறைகளுக்கு எதிராகவும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஏழு உயர்மட்ட தலைவர்களை அமெரிக்கா நியமித்தது.

இதன் தொடர்ச்சியாக, ஈரானின் உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர்கள், சட்ட அமலாக்க அமைச்சர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் கூறும்போது, “தங்களது அடிப்படை உரிமைகளை பாதுகாக்க போராடி வரும் ஈரானின் துணிச்சலான குடிமக்கள் மற்றும் துணிச்சலான பெண்களுடன் அமெரிக்கா என்றும் துணை நிற்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இவ்விவகாரம் தொடர்பாக, ஈரானின் முக்கியத் தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், தற்போது அமைச்சர்கள் மீது ஈரான் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.