யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யா தாக்கினால் புதின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கலாம் – ஜோ பைடன்

யுக்ரேன் நெருக்கடி:

யுக்ரேன் நெருக்கடி: யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க அமெரிக்கா பரிசீலிக்கும் என்று அதன் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவின் செயல்பாடு உலக நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.  அதே சமயம், யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தனக்கு இல்லை என ரஷ்யா கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகள் பதற்றத்தை அதிகரித்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை, யுக்ரேனுடனான ரஷ்ய எல்லையில் சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபரிடம் ரஷ்ய அதிபர் மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க முடியுமா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பைடன், ‘ஆம்’ என்று பதிலளித்தார், மேலும் புதின் அப்படி தாக்குதல் நடத்தினால் அதை செய்வதைப் பரிசீலிப்போம் என்று பைடன் தெரிவித்தார். அதேசமயம், யுக்ரேனுக்கு அமெரிக்க துருப்புக்களை அனுப்பும் திட்டம் குறித்து தற்போதைக்கு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Tamil News