தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமைக்காக காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் திருவுருவச்சிலை திறந்துவைப்பு

காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுத்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட் அவர்களின் திருவுருவச்சிலை இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

ஊரணி சந்தியில் வாவிக்கரை பூங்காவுக்கு அருகில் இந்த சிலை இன்று காலை திறந்துவைக்கப்பட்டது. இலங்கை ஜேசுசபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழாவில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்த திறப்பு விழாவில் இலங்கை ஜேசுசபையின் தலைவர் உட்பட அருட்தந்தையர்கள்,ஜேசுசபை துறவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

1948ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து மட்டக்களப்புக்கு வருகைதந்த அவர் புனித மைக்கேல் கல்லூரி ஆசிரியராகவும் தொழிநுட்ப பயிற்சி கல்லூரியின் ஸ்தாபகராகவும் செயற்பட்டதுடன் மட்டக்களப்பின் விளையாட்டுத்துறைக்கும் அரும்பங்காற்றியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை

அத்துடன் 1990ஆம் ஆண்டுகாலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள், படுகொலைகள்,இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக குரல்கொடுத்தும் வந்திருந்தார்.

இந்த நிலையில் 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஏறாவூர் பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்தபோது அருட்தந்தை அவர்கள் காணாமல்போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமைக்காக காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் திருவுருவச்சிலை திறந்துவைப்பு