அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது தேவையற்ற அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது-ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் புதிய அரசாங்கம் அதன் GSP+ உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கி செயற்படும் என எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியம் இதனை கடுமையான தொனியில் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்வதற்கான பாராளுமன்றத்தின் விரைவான நடவடிக்கையை தொடர்ந்து, இலங்கை மக்களின் கருத்து சுதந்திரம், தனிப்பட்ட உரிமைகளை  ஜனநாயக ரீதியிலும் அமைதியான முறையிலும் நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது தேவையற்ற அதிகாரத்தை பயன்படுத்துவதையும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது.

அத்துடன், அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சியினூடாக மனித உரிமைகளையும் சட்டவாட்சியையும் பாதுகாப்பது இன்றியமையாதது எனவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மக்களுக்கு ஆதரவான அனைத்து முயற்சிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதுடன், ஸ்திரத்தன்மையையும் பொருளாதார மீட்சியையும் உறுதிப்படுத்தி நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கை மக்களுக்காக சுமார் 1 பில்லியன் யூரோவை நிதியுதவியாக வழங்கியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.