சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் கலந்துரையாடல்

இலங்கைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இன்று (19.10.2022) நண்பகல் நடைபெற்றது.

இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்கு எவ்வாறு இணைந்து பணியாற்றலாம் என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்குச் சேவை செய்வதற்கும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கும் வலுவான சிவில் சமூகம் முக்கியமானது என்று இந்தச் சந்திப்பில் டொனால்ட் லூவுடன் கலந்துகொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.