ஐ. நா. அபிவிருத்தித் திட்டத்துடன் ஒத்துழைப்பைத் தொடருவதற்கு இலங்கை ஆர்வமாக உள்ளது-அலி சப்ரி

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடருவதற்கு இலங்கை ஆர்வமாக இருப்பதாக  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் கிறிஸ்டோப் பஹூட்டுடன் நடந்த சந்திப்பில்  வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு  பயணம் செய்திருந்த  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் கிறிஸ்டோப் பஹூட், வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியை (12) சந்தித்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

மேலும் தற்போதைய சவால்களை சமாளிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட முன்னுரிமை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் பிரதி பிராந்தியப் பணிப்பாளர் பஹூட் உறுதிப்படுத்தினார்.

பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் தற்போதைய சவால்களில் இருந்து நிலையான மீட்சியை உறுதி செய்வதற்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குமான வழிகள் குறித்தும்  இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.