ஐ.நா தீர்மானம்: தமிழ் மக்களுக்கான நல்ல தீர்வாக அமையவில்லை -இ.கதிர்

தமிழ் மக்களுக்கான நல்ல தீர்வாக அமையவில்லைதொடர்ச்சியாக ஐ.நாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் என்பது இலங்கையினை அடிபணியவைப்பதும் அச்சுறுத்துவதுமாக இருந்ததே அன்றி தமிழ் மக்களுக்கான நல்ல தீர்வாக அமையவில்லை என  ஜனநாயக போராளிகள் கட்சியின்  பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சியின்  பொதுச் செயலாளர் இ.கதிர்,

”2009 ஆம் ஆண்டு போர் நிறைவிற்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டுகளும் எமது மக்கள் ஜ.நாவினை எதிர்பார்த்த வண்ணம் இருந்தார்கள்.ஐ.நாவில் எமக்கான தீர்வு கொண்டுவரப்படும். இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படும். இங்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு கிடைக்கும். அதன் ஊடாக தமிழர் உரிமை பிரச்சினைக்கு நிதந்தர தீர்வினை பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மட்டத்தில் தொடர்ச்சியாக இருந்தன. இன்றும் அதே நிலைதான் காணப்படுகின்றது.
இம்முறையும் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தினை சந்தித்துள்ளார்கள். அது மிகுந்த வேதனையளிக்கின்றது.

இலங்கை தமிழர்கள் தனித்துவமான இனம். வரலாற்று ரீதியாக வடக்கு கிழக்கு தாயகபகுதியில்  வாழ்ந்து வந்தார்கள் என்ற அங்கிராம் இன்று வரைக்கும் உலக நாடுகளால் தமிழ்மக்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக இலங்கை நாட்டினை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு சென்று அதன் ஊடாக தங்கள் பூகோள ரீதியான அரசியலை நகர்த்துவதற்காக தமிழ் மக்களின் பிரச்சினையினை சர்வதேசம் கையாண்டு வருகின்ற தோற்றப்பாடு காணக்கூடியதாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய போராளிகள் என்ற வகையில் இது மிகுந்த மனவேதனையினை தருகின்றது. தொடர்ச்சியாக ஐ.நாவின் அமர்வு வரும் போது தமிழ்தேசியம் சார்ந்த அரசியல் வாதிகள் தங்களின் கட்சி கொள்கைகளையும் அரசியலையும் அந்த காலங்களில் முன்னெடுத்து செல்கின்றாறர்களே தவிர, மக்கள் தொடர்பில் மக்களின் நிதந்தர தீர்வு, இழைக்கப்பட்ட அநீதிகள், நீதி விசாரணை, போரின் பின்னர் சரணடைந்த போர்க்  கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர், போராளிகளின் மறுவாழ்வு,  போன்றன தொடர்பில் எந்த முன்னேற்றத்தினையும் இந்த அரசு செய்யவில்லை. அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க முன்வரவில்லை.

உண்மையில் போரில் ஈடுபட்ட சம பங்காளிகள் என்ற அடிப்படையில் போரிற்கு பின்னர் பத்து ஆண்டுகளாகியும் இலங்கை அரசாங்கம் நேரடிப்பங்களிகள் என்ற வகையில் முன்னாள்  போராளிகள் இன்று ஒரு அசரியல் கட்டமைப்பாக நாட்டில் செயற்பட்டு வருகின்றார்கள். எம்மோடு இலங்கை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக எந்த பேச்சு வார்த்தையிலும் ஈடுபடவில்லை. அதேபோன்று பன்னாட்டு சமூகமும் உண்மைகளை கண்டறிவதற்காக எந்த சாட்சியங்களும் பதிவு செய்து கொள்ள விரும்பவில்லை.

மாறாக போரில் சம்மந்தப்படாதவர்களுடன் விடுதலைப் போராட்டத்தின் எந்த தொடர்பும் இல்லாதவர்களுடன் மனித உரிமைகள், மக்களின் உரிமைகள், போராளிகளின்  நிலைப்பாடு தொடர்பாக தொடர்ச்சியாக பேசுவதில் எந்த பயனும் இல்லை.

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திவிட்டு சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்தைகளை நடத்தி உண்மைகளை கண்டறிந்து நீதிக்கான பொறிமுறையினை உருவாக்குவதுதான் பொருத்தமானதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021