இலங்கைக்கு எதிரான ஐநாவின் தீர்மானம்: ஒரு பழைய துணியில் புதிய ஒட்டு-பேராசிரியர் குழந்தைசாமி

6.10. 2022 வியாழன் அன்று செனீவாவில் உள்ள ஐநாவில் நடைபெற்ற 51 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு 20 நாடுகள் ஆதரவாகவும் 7 நாடுகள் எதிராகவும்(சீனா, பாகிஸ்தான் உள்பட வாக்களித்தனர். 

20 நாடுகள் (இந்தியா, யப்பான், நேபாளம், கத்தார் உள்பட) வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தில் எண் 05, 06, 14, 15 போன்ற சில தீர்மானங்கள் மனித உரிமை மீறல்களைப்பற்றி பேசுகின்றன. இதில் இடம்பெற்றுள்ள தீர்மானங்கள் பொதுவாக எல்லாமே மனித உரிமை மீறல்களைப்பற்றி பேசுகின்றன. இதில் உள்ள பிழைகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பொதுவாக்குதல் (Generalization)

தீர்மானங்கள் பொதுவாக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இந்திய தூதர் திருமிகு இந்திரா மணி பாண்டே அவர்கள் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்காக போராடுவதும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு போராடுவது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும் என்று கூறுகிறார். இப்படி பொதுவாக்குதல் ஒரு மனிதனின் பெருந்தன்மையைக் காட்டுகிறதென நாம் கருதலாம்.

அவ்வாறு செய்வது சில இடங்களில் சரியானதாகும். ஆனால் எல்லா இடங்களில் பெரிய ஆபத்தாகும். இதைத்தான் திருதந்தை பிரான்சிசு தனது சுற்றுமடலில்  “Fratelli Tutti”  நயனற்ற பொதுவாக்குதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய கொடூரத்தை விளைவிக்கிறது என்று விளக்குகிறார். நயனுள்ள பொதவாக்குதல் நன்மை பயக்கும். நயனற்ற பொதுவாக்குதல் மிகப்பெரிய துரோகமாகும். பொதுவாக்கும் தன்மை மேட்டுக்குடி மக்களின், அதிகாரத்தில் உள்ளவர்களின் பண்பாட்டு அரசியல் செயல்பாடாகும். இது தமிழர்களுக்கு பெரிய கொடூரத்தை செய்துள்ளது.

மூடிமறைத்தல்

இந்தப் பொதுவாக்குதல் தங்களது தவறுகளை மூடிமறைப்பதற்காக பயன்படுகிறது. சிங்கள பௌத்த பேரினவாத அரசு செய்த இனப்படுகொலையை மூடிமறைக்க இந்தப் பொதுவாக்குதல் பயன்படுகிறது. இந்த தீர்மான அறிக்கையில் தமிழர்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டது என்று ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை. யாருக்கு, யார் என்ன செய்தார்? என்று விளக்காமல் தீர்மானம் எடுப்பது மூடிமறைப்பதற்கு பயன்படுகிறது.

தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கும் தீர்மானமாக உள்ளது. உக்ரேன், மியான்மர் போன்ற நாடுகளில் நடந்த போரை ஓர் இனவழிப்பு போர் என்று கருதுகிற ஐநா தமிழர்களுக்கு நடந்த இனவழிப்பை மூடிமறைக்க முயற்சிப்பது அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இவ்வாறு மூடிமறைக்கும் செயல் வரலாற்று அரசியல் குற்றமாகும்.

இனப்படுகொலை செய்த இனவாத அரசைக் காப்பாற்ற இந்த மூடிமறைத்தல் உதவுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவன் தமிழ் மக்களையும் சீரழித்தவனாக இருக்கிறான் என்பதை மூடிமறைப்பதால் அமைதியை உருவாக்க முடியாது. மூடிமறைத்தல் ஆதாயம் தேடும் கூட்டத்தின் யுத்தியாக பயன்படுகிறது. இதனால் குற்றங்கள் அதிகரிக்கும் குறைவதற்கு வாய்ப்பே இல்லை. மூடிமறைத்தல் குற்றவாளியின் மூர்க்கத்தனமான செயலாகும்.

திசை திருப்புதல்

இந்திய தூதர் பாண்டே ’13 வது திருத்தச்சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துகிறார். அதற்கான செயல்கள் முன்னெடுப்புகள் போதுமானதாக இல்லை’ என்று சொல்வது பிரச்சினையை திசை திருப்புவதாகும். 13வது திருத்தச் சட்டம் நயன்மையைப் பெற்றுத்தரும் சட்டமல்ல. நடந்த இனப்படுகொலைக்கு நயன்மை வேண்டும். அதிலிருந்து திசைமாற்றுவது இன்னொரு இனப்படுகொலையாகும். இலங்கையில் நடந்த பொருளாதார சிக்கலை அதிகம் பேசுவது திசைதிருப்பும் செயலாகும்.

தமிழ் அரசியல்வாதிகள் அமைதிகாப்பது, சிங்கள அரசுக்கு கைக்கூலிகளாக பணிசெய்வது பிரச்சினையை திசைதிருப்ப வழிவகுக்கும். நடந்ததை மறந்துவிட்டு நடக்கிறது, நடக்கபோகிறது பற்றி சிந்திப்போம் என்று சில படித்த முட்டாள்கள் பேசுவது அவர்களது திசை திருப்பும் செயலாகும். மனித உரிமை மீறல்களை மட்டும் பேசுவது நன்மை பாதையிலிருந்து விலகிசெல்வதற்கு உதவுகிறது.

சுருக்குதல்

எல்லா நாடுகளில் நடப்பதுபோல இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்று கூறுவது தமிழர்களுக்கு நடந்த கொடூரத்தை சுருக்கிவிடுவதாகும். பிரச்சினையை சுருக்குவது நயனற்ற செயலாகும். இதனால் பிரச்சினையின் வீரியத்தையும் கடினத்தன்மையையும் அழிப்பதாகும். இந்த தீர்மானம் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை ஒரு சாதாரண நிகழ்வாக கருதுவதற்கு வழிவகுக்கிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், 1. 46. 000 மக்களை கொலைசெய்தது போன்ற பேரினவாத செயல்களை சுருக்கி விளக்குவது ஓர் இனப்படுகொலைக்கு சமமாகும். இனப்படுகொலைக்கு வேண்டிய ஆதாரங்களும், தரவுகளும் காரணங்களும் இருந்தும் இனப்படுகொலை என ஏற்றுக்கொள்ள இந்த தீர்மானம் மறுக்கிறது. தனிப்பட்ட ஆதாயம் தேடும் உலக நாடுகள் இந்த சுருக்கலுக்கு அடிப்படை காரணமாக உள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது.

பிளவுபடுத்துதல்

இந்த தீர்மானத்தில் இந்திய ஒன்றிய அரசின் தமிழ்நாட்டு அரசின் ஒற்றுமையின்மை, ஈழத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமையின்மை, திருமிகு கசேந்திர பொன்னம்மபலம், திருமிகு சிறீதரன் சிவஞானம் போன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர தவறான வழியில் செல்லுதல், உலக தமிழர் அமைப்பு, பாதிக்கப்பட்ட சில நபர்கள் தவிர பிற அமைப்புகளின் ஈடுபாடு ஐநாவில் மிகக்குறைவு ஆகியவை வெளிப்படுகின்றன. தீர்மானங்கள் காலம் கடத்துவதால் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றன. ஒற்றுமை நயன்மையை நிலைநாட்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இறுதியாக, நாம் கையறு நிலையில் இருந்தாலும் இந்த தீர்மானத்தை வைத்து தமிழர்களுக்கு நடந்த கொடூரத்தை உலகிற்கு எடுத்துச்சொல்லி நயன்மையை நிலைநாட்ட சிந்திக்கவேண்டும். செயல்பட வெண்டும். ஒன்றுமே இல்லை என்று நாம் விரக்தியாகாமல் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி செய்யவேண்டிய பணிகளை திட்டமிட்டு எதிர்நோக்குடன் நம்பிக்கையுடன் செய்யவேண்டும்.

இருட்டிலும் கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்iயில் தேடுவோம் கண்டடைவோம். இந்த தீர்மானத்தில் இருக்கும் வழிகளை(எண் 05, 06, 14, 15) பயன்படுத்தி கரம்கோர்த்து பணிசெய்ய முன்வருவோம். பாடம் கற்றுக்கொள்வோம். செயல்படுவோம் நன்மையை தமிழர்களுக்கு உறுதியாக கிடைக்கும் வரையில்.