தலிபான்கள் தாக்குதலில் இந்திய ஊடகவியலாளர் பலி – ஐ.நா இரங்கல்

625515 01 02 1 1009570 1626491904 தலிபான்கள் தாக்குதலில் இந்திய ஊடகவியலாளர் பலி – ஐ.நா இரங்கல்

தலிபான்கள் தாக்குதலில் பலியான இந்திய புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக் மறைவிற்கு ஐ.நா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை தலிபான்களிடம் இருந்து மீட்பதற்காக அரசு படைகள் கடும் சண்டையை நடத்தி வருகின்றன.

இரு தரப்புக்கு இடையிலான இந்த மோதல் குறித்த செய்திகள் மற்றும் படங்களை சேகரிக்கும் பணியில், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக்கி ஈடுபட்டிருந்தார். அப்போது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி டேனிஷ் சித்திக்   உயிரிழந்துள்ளார்.

ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக் மும்பையைச் சேர்ந்தவர். ஊடகத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் புலிட்சர் விருதை கடந்த 2018-ம் ஆண்டு அவர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புகைப்பட ஊடகவியலாளர் சித்திக்கின் மரணம் ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் எதிர் கொள்ளும் அச்சுறுத்தல்களை வெளிக் காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் ஊடகத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தலிபான்களின் தாக்குதலால் பலியான சித்திக் மறைவிற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ஐ.நா. சபை பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் டேனிஷ் மறைவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021